ப்ரோ கபடி லீக்கில் இந்த முறை தமிழ் தலைவாஸ் கோப்பையை வெல்லும் என்று அந்த அணியின் துணை கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் தெரிவித்துள்ளார்.
Arjun Deshwal Confident of Tamil Thalaivas PKL Victory! ப்ரோ கபடி லீக் சீசன் 12 ஆகஸ்ட் 29 முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் சிறப்பு நிகழ்ச்சி ‘கிங்ஸ் ஆஃப் கபடியில்’ நடந்த பிரத்யேக உரையாடலில், தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர ரைடரும், துணை கேப்டனுமான அர்ஜுன் தேஷ்வால், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியிலிருந்து தமிழ் தலைவாஸ் அணிக்கு வந்த அனுபவம், தனது பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியனுடன் உள்ள பிணைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் தலைவாஸ் துணை கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் பேட்டி
அணி மாற்றம் மற்றும் பயிற்சியாளருடன் உள்ள பிணைப்பு குறித்து பேசிய அர்ஜுன் தேஷ்வால், ''ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்காக நான் மிகுந்த பங்கு ஆற்றினேன்.அங்கு நிறைய கற்றுக்கொண்டேன். அணி மாறியிருந்தாலும், எனக்கு பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. ஏனெனில் ஒரு வீரர் மற்றும் பயிற்சியாளர் (சஞ்சீவ் பாலியன்) இடையே வலுவான புரிதல் இருக்க வேண்டும்; அந்த முன்னிலை எனக்கு உள்ளது''என்றார்.
இந்த முறை சிறந்த ஆட்டம் இருக்கும்
சீசன் 11 செயல்திறன் குறித்து மனம் திறந்த அவர், ''கடந்த சீசனில் என் ஆட்டம் மிகச் சிறப்பாக இல்லை. அணியிலும் ஏற்றத் தாழ்வுகள் இருந்தன, என்னிடமும் சில குறைகள் இருந்தன. சில டாக்கிள்களில் தவறுகள் நடந்தன. ஆனால் அதை எல்லாம் பின்தள்ளிவிட்டேன். இப்போது அந்த தவறுகளைச் சரி செய்வதில் கவனம் செலுத்துகிறேன். பயிற்சியின் போது பயிற்சியாளரிடம் என் பிழைகளைப் பற்றி கேட்டு வருகிறேன். உடல் வலிமையை மேம்படுத்திக் கொண்டிருக்கிறேன். இந்த முறை சிறந்த ஆட்டத்தை காட்ட தயாராக உள்ளேன்'' என்று தெரிவித்தார்.
எங்கள் பலம் தெரியும்
இதேபோல் சீசன் 9 இல் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸுடன் பட்டம் வென்ற அனுபவம் குறித்து பேசிய அர்ஜுன் தேஷ்வால், ''அந்த நேரத்தில் என் நம்பிக்கை உச்சத்தில் இருந்தது. என் உடல் சோர்வாக இருந்தாலும், அணியின் ஆதரவு என்னை முன்னேறச் செய்தது. அப்படி ஆதரவு இருந்தால் தானாகவே முன்னேற்றம் வரும். இப்போது அதே நம்பிக்கையுடன் தயாராகி வருகிறோம். நான் இன்னும் அதே அர்ஜுன்தான். எங்களுக்கு எங்கள் பலம் தெரியும்'' என்றார்.
ஸ்டார் வீரர்கள் இருப்பது பலம்
மேலும் இந்த சீசனில் பவான் சேஹ்ராவத்துடன் இணைந்து விளையாடுவது கருத்து தெரிவித்த அவர், ''பவான், நரேந்தர் போன்ற பெரிய வீரர்கள் எங்கள் அணியில் உள்ளனர். பவான் இருப்பதால், இந்த சீசனில் எங்கள் அணியின் வலிமை அதிகரிக்கும். நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து 100% கொடுப்போம். சூழ்நிலைக்கேற்ப யார் சிறப்பாக ரெய்டு செய்ய முடியும் என்பதை ஆய்வு செய்வோம்'' என்று குறிப்பிட்டார்.
போட்டி மனப்பான்மை உண்டா?
இது தவிர பவான் சேஹ்ராவத்துடன் போட்டி மனப்பான்மை ஏற்படும் வாய்ப்புகள் குறித்து மனம் திறந்த அர்ஜுன் தேஷ்வால், ''பலர் நினைப்பது, பவானும் நானும் பெரிய நட்சத்திரங்கள் என்பதால் ஒரே அணியில் சேர்ந்து விளையாட முடியாது என்பதுதான். ஆனால் அது அவர்களின் எண்ணமே. எங்களுடைய மனப்பான்மை வேறுபட்டது. அணிக்காக சிறப்பாக செயல்பட்டு, சரியான முடிவுகளை எடுப்பதே எங்கள் நோக்கம்'' என்றார்.
முதன் முறையாக தமிழ் தலைவாஸ் கோப்பை வெல்லும்
இறுதியாக இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் முதன் முறையாக கோப்பையை வெல்லும் என்று அர்ஜுன் தேஷ்வால் நம்பிக்கை தெரிவித்தார். ''தமிழ் தலைவாஸ் தனது முதல் கோப்பையை உயர்த்துவதே எங்கள் ஒரே குறிக்கோள். இதுவரை அணி பட்டம் வெல்லவில்லை; அதை மாற்றத் தீர்மானித்துள்ளோம். 100% உழைப்பை கொடுத்து, ஒரே அணியாக விளையாடுவோம். எங்களது பெயரை உயர்த்த வேண்டும், எங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் அதையே சொல்லி ஊக்குவித்துள்ளனர். நாங்கள் அதை சாதிக்கவேண்டும்'' என்று சொல்லி முடித்தார். ப்ரோ கபடி லீக் சீசன் 12, ஆகஸ்ட் 29 முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களிலும், ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியிலும் நேரடியாக ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
