உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அர்ஜென்டீனா தகுதி; ஹாட்ரிக் கோல் அடித்து மெஸ்ஸி அசத்தல்…
மெஸ்ஸி அடித்த ஹாட்ரிக் கோல்களால் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அர்ஜென்டீனா தகுதி பெற்றது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது இதில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று ஈகுவடார் தலைநகர் குயிட்டோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், அர்ஜென்டீனா 3-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணியை வீழ்த்தி உலகக் கோப்பையில் பங்கேற்க தகுதி பெற்றது.
இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே ஈகுவடாரின் ரொமாரியோ கோலடித்தார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. ஆனால் அசத்தலாக ஆடிய லயோனல் மெஸ்ஸி 12, 20 மற்றும் 62-வது நிமிடங்களில் கோலடித்து ஹாட்ரிக் கோலை பதிவு செய்ததன்மூலம் அர்ஜென்டீனா 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிப் பெற்றது.
தற்போதைய நிலையில் தென் அமெரிக்காவிலிருந்து பிரேசில், அர்ஜென்டீனா, உருகுவே, கொலம்பியா அணிகள் நேரடித் தகுதி பெற்றுள்ளன.
ஐரோப்பாவிலிருந்து பிரான்ஸ், போர்ச்சுகல் அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
உருகுவே 3-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தியது.
கொலம்பியா 1-1 என்ற கணக்கில் பெருவுடன் டிரா செய்தது. இதன்மூலம் உருகுவே, கொலம்பியா அணிகள் உலகக் கோப்பையில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.
பெரு அணி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.