அங்கிதா ரெய்னாவின் ஆட்டம் சிறப்பு - புகழ்ந்து தள்ளிய சானியா மிர்ஸா...
ஃபெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் அங்கிதா ரெய்னாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது என்று இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "டென்னிஸில் இளம் வீரர் / வீராங்கனைகள் நல்ல திறமையுடன் விளையாடி வருகின்றனர். ஆனால், அடுத்த கட்டத்துக்குத்தான் அவர்களால் செல்ல முடியவில்லை.
அண்மையில், டெல்லியில் நடைபெற்ற ஃபெட் கோப்பை போட்டியில் அங்கிதா சிறப்பாக விளையாடினார்.
சானியாவுக்கு அடுத்தது யார்? என்ற கேள்வி கடந்த பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறேன். ஏன் சானியாவுக்கு அடுத்தது என்ற கேள்வியை எழுப்புகிறீர்கள். சானியாவை விட சிறந்த வீராங்கனை என்றுதான் நாம் குறிப்பிட வேண்டும்.
வலது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் எனக்கு போராட்டமாகவே நகர்கிறது. நான் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவேன் என்று நம்புகிறேன். எதிர்வரும் பிரெஞ்ச் ஓபனில் பங்கேற்க முயற்சிப்பேன்" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காயம் காரணமாக எந்தவொரு போட்டியிலும் பங்கேற்க இயலாத காரணத்தால், சர்வதேச மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டார் சானியா என்பது குறிப்பிடத்தக்கது.