Anil Kumbles talents and experiences should be used for Indian cricket - Sunil Gavaskar

ஒரு வீரராகவும், நிர்வாகியாகவும் அனில் கும்ப்ளேவிடம் உள்ள திறமைகளும் அனுபவங்களும் இந்திய கிரிக்கெட்டுக்குப் பயன்படவேண்டும் என்று உருக்கத்துடன் தெரிவித்தார் சுனில் கவாஸ்கர்.

அனில் கும்ப்ளேவின் விலகல் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியது:

“கும்ப்ளே - கோலி இடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்து எனக்குக் குறைவாகவே தெரியும். ஆனால், இது இந்திய கிரிக்கெட்டின் துக்க நாள். அனில் கும்ப்ளே பயிற்சியாளர் ஆன நாளிலிருந்து இந்தியா கிட்டத்தட்ட அனைத்துப் போட்டிகளையும் வென்றுள்ளது.

கடந்த ஒருவருடத்தில் கும்ப்ளே தவறு எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. கருத்து வேறுபாடுகள் எல்லா அணிகளிலும் ஏற்படும். ஆனால், ஆட்ட முடிவுகளையே இறுதியில் காணவேண்டும். 

ராஜிநாமா செய்ய கும்ப்ளேவுக்குக் காரணங்கள் இருந்திருக்கும். ஆனால் அவர் பணியில் நீடிப்பார் என நினைத்தேன். ஆலோசனைக் குழு கும்ப்ளேவுக்கு ஆதரவாக உள்ளதால் அவர் பணியில் நீடித்திருக்க வேண்டும். நிச்சயம் அவர் இன்னும் பலமாக மீண்டுவருவார் என எண்ணுகிறேன்.

ஆனால் முதல்முறையாக போராட்டக் குணம் கொண்ட கும்ப்ளே அதை எதிர்த்து நிற்கவில்லை. ஒரு வீரராகவும், நிர்வாகியாகவும் அனில் கும்ப்ளேவிடம் உள்ள திறமைகளும் அனுபவங்களும் இந்திய கிரிக்கெட்டுக்குப் பயன்படவேண்டும்” என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.