இலண்டன் கிளாசிக் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்காவின் வெஸ்லேவுடன் டிரா செய்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இலண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 5-ஆவது சுற்றில் ஆனந்தும், வெஸ்லேவும் மோதிய ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இந்தத் தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் வெஸ்லே, ஆனந்தை வீழ்த்த கடுமையாகப் போராடினார்.

ஆனால் நாவல்டி முறையில் காய்களை நகர்த்திய ஆனந்த், வெஸ்லேவை திணறடித்தார். இதனால் வேறு வழியில்லாததால் போட்டியை டிராவில் முடித்தார் வெஸ்லே. இந்தத் தொடரில் ஆனந்த் 3-ஆவது முறையாக டிரா செய்துள்ளார்.

மற்றொரு 5-ஆவது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ், பல்கேரியாவின் வெஸலின் டோபலோவை தோற்கடித்தார்.

5-ஆவது சுற்றின் எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் டிராவில் முடிந்தன. தற்போதைய நிலையில் வெஸ்லே 3.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக், அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா, ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியன், அமெரிக்காவின் பாபியானோ கருணா ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளனர்.

ஆனந்த், நெதர்லாந்தின் அனிஷ் கிரி ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் உள்ளனர். பிரான்ஸின் மேக்ஸைம் வச்சியர், மைக்கேல் ஆடம்ஸ் ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்திலும், வெஸலின் டோபலோவ் 0.5 புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.