யாரோ இவரை வெத்தல பாக்கு வச்சு அழைச்ச மாதிரி.. என்ன ஒரு திமிர் பேச்சு..?
ஐபிஎல் தொடரில் விளையாட என்னை அழைத்தாலும் செல்லமாட்டேன் என அஃப்ரிடி ஆணவமாக தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் அஃப்ரிடி டுவீட் செய்திருந்தார். அதற்கு கபில் தேவ், கம்பீர், கோலி, ரெய்னா ஆகியோர் தக்க பதிலடி கொடுத்திருந்தனர்.
அந்த சர்ச்சையே அடங்காத நிலையில், அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளார் அஃப்ரிடி. ஐபிஎல் போட்டியில் விளையாட தன்னை அழைத்தால் கூட செல்லமாட்டேன் என அஃப்ரிடி கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடங்கிய புதிதில், முதல் சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் அஃப்ரிடி ஆடினார். அப்போது பேசிய அஃப்ரிடி, ஐபிஎல் தொடரில் நான் விளையாடிய அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. மிகச்சிறந்த அனுபவம். மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கிரிக்கெட் போட்டித் தொடர் ஐபிஎல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனக்கு கிடைத்த மிகச் சிறந்த அனுபவம் என புகழ்ந்து தள்ளினார்.
ஆனால் அதற்கு முற்றிலும் முரணாக தற்போது திமிராக பேசியுள்ளார். பாகிஸ்தான் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அஃப்ரிடியிடம் ஐபிஎல் போட்டியில் விளையாட உங்களை அழைத்தால் ஆடுவீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அஃப்ரிடி, பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி, இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியைக் காட்டிலும் எதிர்காலத்தில் மிகப்பெரியதாக உருவாகும். ஐபிஎல் போட்டி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என்னை விளையாட அழைத்தால் கூட நான் ஐபிஎல் போட்டிக்கு வரமாட்டேன். எங்கள் நாட்டில் நடக்கும் பிஎஸ்எல் போட்டிதான் மிகப்பெரியது, விரைவில், ஐபிஎல் போட்டியை எங்களுடைய பிஎஸ்எல் போட்டி பின்னுக்குத் தள்ளும்.
இப்போதுள்ள நிலையில் நான் பிஎஸ்எல் போட்டியில் விளையாடுவதைத்தான் விரும்புகிறேன். ஐபிஎல் போட்டி எனக்கு தேவையில்லை. அதில் விளையாடவும் ஆசையில்லை, ஒருபோதும் ஆசைப்பட்டதும் இல்லை என்று அஃப்ரிடி திமிராக பதிலளித்துள்ளார்.