Afghanistan wins victory defeat Bangladesh


வங்காளதேசத்திற்கு எதிரான கடைசி டி20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று தொடரையும் கைப்பற்றியது.

வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஓவர் கிரிக்கெட் போட்டி டேராடூனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. 

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்கள் சேர்த்தது. அடுத்து களம் கண்ட வங்காளதேச அணி ஒரு கட்டத்தில் 53 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து நின்றது. 

அதன்பின்னர் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமும், மக்முதுல்லாவும் இணைந்து அணியை வெற்றிக்கு வழிவகுத்தார். கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 

19–வது ஓவரை வீசிய கரிம் ஜனத்தின் ஓவரில் முஷ்பிகுர் ரஹிம் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை விரட்டியடிக்க, அந்த ஓவரில் 21 ஓட்டங்கள் வந்தது.

இதையடுத்து கடைசி ஓவரில் வங்காளதேசத்தின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் வீசிய முதல் பந்தில் முஷ்பிகுர் ரஹிம் ஆட்டம் இழந்தார். 

அடுத்த 4 பந்துகளில் ரஷித்கான் 5 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி பந்தில் வங்காளதேசத்தின் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

கடைசி பந்தை சந்தித்த ஆரிபுல் ஹக், ‘லாங் ஆன்’ திசையில் பந்தை பவுண்டரி நோக்கி தூக்கியடித்தார். பந்து சிக்சருக்கு செல்லுமோ என்று எதிர்பார்த்த வேளையில், அங்கு நின்ற ‌ஷபியுல்லா தாவிக்குதித்து பந்தை தடுத்தார். 

கீழே விழுந்த பந்து மறுபடியும் எல்லைக்கோட்டை நூலிலை அளவுக்கு நெருங்கியபோது, ‌ஷபியுல்லா தடுத்து, பவுண்டரியாகாமல் பார்த்துக் கொண்டார். 

இதற்குள் 2 ஓட்டங்கள் எடுத்த வங்காளதேச வீரர்கள் 3–வது ஓட்டத்துக்கு ஓட முயற்சித்தபோது மக்முதுல்லா ரன்–ஔட் செய்யப்பட்டார். 

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. வங்காளதேச அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.

வெற்றியையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஆப்கானிஸ்தான் 3–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது. 

இந்த தொடரில் மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய ரஷித்கான் தொடர்நாயகன் விருதை பெற்றார்.