Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மார்ட்டினா நவ்ரதிலோவா, காரா பிளாக், லிப்ஸல் ஹுபர் ஆகியோரை அடுத்து, மகளிர் இரட்டையர் தரவரிசையின் முதலிடத்தில் நீண்டகாலம் இருப்பது திருப்தி அளிக்கிறது என்று சானியா மிர்சா கூறினார்.

மகளிர் இரட்டையர் தரவரிசையின் முதலிடத்தில் சானியா தொடர்ந்து 80-ஆவது வாரமாக நீடித்து வருகிறார். இதற்கு முன்பாக, செக். குடியரசின் மார்ட்டினா நவ்ரத்திலோவா (181 வாரங்கள்), ஜிம்பாப்வேயின் காரா பிளாக் (145 வாரங்கள்), தென் ஆப்பிரிக்காவின் லிùஸல் ஹுபர் (134 வாரங்கள்) ஆகியோர் முதலிடத்தில் நீண்ட காலம் நிலைத்திருந்தனர்.

இதுகுறித்து சானியா கூறியது: “என்னைப் பொறுத்த வரையில், எனது இந்த டென்னிஸ் பயணம் நம்ப முடியாததாக உள்ளது. கனவாக இருந்த இலட்சியங்கள் நிறைவேறியுள்ளன. இத்தகைய இடத்தை அடைவது ஒரு சாதனை என்பதும், அவ்வாறு முதல் முறையாக அடைந்த இடத்தை நீண்ட காலத்துக்கு தக்கவைத்துக் கொள்வது அதைவிடக் கடினம் என்றும் எப்போதும் உணர்ந்திருந்தேன்.

எனது இந்த டென்னிஸ் வாழ்க்கையில் நான் சாதித்துள்ளதற்கு குறிப்பிட்டு ஏதேனும் ஒன்றை மட்டும் காரணமாக கூற இயலாது. ஒரே குறிக்கோளுடன் சரியான திசையை நோக்கி அர்ப்பணிப்புடன் நானும், எனது அணியும் பணியாற்றுவது சாதனைக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

இதற்கு முன்பாக, தரவரிசையின் முதலிடத்தில் மார்ட்டினா நவ்ரத்திலோவா, காரா பிளாக், லிùஸல் ஹுபர் ஆகிய 3 ஜாம்பவான்கள் மட்டுமே நீண்டகாலம் இருந்தது வரலாறாக உள்ளது. தற்போது அந்த வரிசையில் அவர்களை அடுத்து நானும் இருப்பது திருப்தி அளிப்பதாக உள்ளது. இதில், நவ்ரத்திலோவா மகளிர் டென்னிஸில் எப்போதும் ஒரு மிகச்சிறந்த வீராங்கனை.

லிப்ஸல் ஹுபருடன் இணைந்து, கடந்த 2004-ஆம் ஆண்டு ஹைதராபாதில் எனது முதல் டபிள்யூடிஏ பட்டத்தை வென்றேன். அதேபோல், காரா பிளாக்குடன் இணைந்து எனது முதல் டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் பட்டத்தை கைப்பற்றினேன்.

இந்த மூவரது சாதனையை முறியடிப்பதற்கு டென்னிஸில் இன்னும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதனால், நான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு போட்டியில் மட்டுமே தற்போது கவனம் செலுத்துவேன் என்று சானியா மிர்சா கூறினார்.
மகளிர் இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள முதல் இந்திய வீராங்கனை சானியா மிர்சா என்பது குறிப்பிடத்தக்கது.