இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 ஓட்டங்கள் எடுத்தது.

இரு அணிகளுக்கு இடையே வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 94 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் 112 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்த நிலையில், 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தை பென் ஸ்டோக்ஸ் 25, ஜோஸ் பட்லர் 18 ஓட்டங்களுடன் தொடங்கினர். இதில் பென் ஸ்டோக்ஸ் 31 ஓட்டங்கள் எடுத்து வீழ்ந்தார். ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்து நிலைத்தார்.

கிறிஸ் வோக்ஸ் 11, ஆதில் ரஷீத் 4, ஜேக் பால் 31 ஓட்டங்கள் எடுத்தனர். இறுதி விக்கெட்டாக பட்லர் 76 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் 130.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 400 ஓட்டங்கள் எடுத்தது இங்கிலாந்து. ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓட்டங்கள் ஏதும் இன்றி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்தியத் தரப்பில் 2-ஆவது நாளில் அஸ்வின் 2, ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல், முரளி விஜய் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் ராகுல் 24 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மொயீன் அலி பந்துவீச்சில் பவுல்டானார்.

அவரைத் தொடர்ந்து புஜாரா களத்துக்கு வந்தார். முரளி-புஜாரா ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 195 பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுத்தது. முரளி விஜய் 126 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் அரைசதம் கடந்தார்.

இவ்வாறாக 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 52 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 70, புஜாரா 47 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இந்தியா இன்னும் 254 ஓட்டங்கள் எடுக்க வேண்டியுள்ளது. அணியின் வசம் 9 விக்கெட்டுகள் உள்ளன.