அடுத்த ஐபிஎல் சீசன் எப்போது தொடங்குது தெரியுமா..? வெளியானது பரபரப்பு தகவல்
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசன் திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே தொடங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசன் திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே தொடங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் 12வது சீசன் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி உலக கோப்பை தொடங்க உள்ளது. இதற்கிடையே மார்ச் 29ம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கி மே 19ம் தேதி வரை நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்பிறகு உலக கோப்பைக்கு மிகக்குறுகிய இடைவெளியே இருப்பதால், உலக கோப்பையில் ஆடுவதற்கு ஏதுவாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோருக்கு அடுத்த ஐபிஎல் சீசனிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கோரிக்கை விடுத்திருந்தார்.
பிசிசிஐ-யின் நிர்வாகக்குழுவுடனான ஆலோசனையில் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார் விராட் கோலி. ஆனால் விராட் கோலியின் கருத்திலிருந்து ரோஹித் சர்மா முரண்பட்டிருந்தார். ஐபிஎல் அணி உரிமையாளர்களும் கோலியின் கோரிக்கைக்கு செவிமடுக்க வாய்ப்பில்லை. அதேநேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உலக கோப்பை முன்னதாக போதுமான ஓய்வு வழங்கப்படுவதும் அவசியம்.
எனவே அதற்கேதுவாக ஐபிஎல் 12வது சீசனை மார்ச் 29ம் தேதிக்கு பதிலாக ஒருவாரம் முன்னதாக மார்ச் 23ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் மார்ச் 23ம் தேதி ஐபிஎல் தொடங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.