2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 510 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியை வெறும் 132 ரன்களுக்கு சுருட்டியது. 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாகிஸ்தான் அணியின் அபித் அலி - அசார் அலியின் பார்ட்னர்ஷிப்பால், முதல் விக்கெட்டை விரைவில் இழந்த பாகிஸ்தான் அணி, 2வது விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. அபாரமாக ஆடி சதமடித்த அசார் அலி 126 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாபர் அசாம், ஃபவாத் ஆலம் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, சஜித் கான் 20 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அபாரமாக ஆடிய அபித் அலி இரட்டை சதமடித்தார். அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய நௌமன் அலி 97 ரன்னில் ஆட்டமிழக்க, அத்துடன் 510 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை பாகிஸ்தான் அணி டிக்ளேர் செய்தது. அபித் அலி 215 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நிலையில், 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் அடித்திருந்தது. 3ம் நாளான இன்றைய ஆட்டத்திலும் சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே வீரர்கள் ஆட்டமிழக்க, 132 ரன்களுக்கே ஆல் அவுட்டானது அந்த அணி.

பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 378 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கி ஜிம்பாப்வே அணி ஆடிவருகிறது.