அறிமுக போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாக ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்கு, தான் கூறிய அறிவுரை என்னவென்று யுஸ்வேந்திர சாஹல் கூறியுள்ளார். 

தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி, ஐபிஎல் 13வது சீசனில்(2019 ஐபிஎல்) கேகேஆர் அணிக்காக அபாரமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஐபிஎல்லில் சிறப்பாக பந்துவீசியதன் விளைவாக, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான டி20 அணியில் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றார். ஆனால் காயம் காரணமாக அவர் அந்த தொடரில் ஆடமுடியாமல் போனது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காயத்திலிருந்து மீண்ட வருண் சக்கரவர்த்தி, அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் யோ யோ ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேறாததால், அந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து 3வது முறையாக இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்று இலங்கை சென்றுள்ள வருண் சக்கரவர்த்திக்கு, ஒருநாள் தொடரில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், டி20 போட்டியில் ஆட வாய்ப்பளிக்கப்பட்டது. 

கொழும்பில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமான வருண் சக்கரவர்த்தி, 4 ஓவர்கள் பந்துவீசி 28 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 164 ரன்களை குவித்த இந்திய அணி, இலங்கையை 126 ரன்களுக்கு சுருட்டி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், அறிமுக போட்டியில் களமிறங்கிய ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்கு, போட்டிக்கு முன்பாக உத்வேகப்படுத்தியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல். 

இதுகுறித்து பேசியுள்ள யுஸ்வேந்திர சாஹல், போட்டிக்கு முன்பாக வருண் சக்கரவர்த்தியுடன் பேசினேன். எப்போதும்போலவே பந்துவீசுமாறு அறிவுறுத்தினேன். சர்வதேச கிரிக்கெட்டில் முதல் போட்டியில் ஆடும்போது எந்தமாதிரியான அழுத்தம் இருக்கும் என்று எனக்கு தெரியும். சர்வதேச கிரிக்கெட்டோ அல்லது ஐபிஎல்லோ எந்தவிதமான போட்டியாக இருந்தாலும், இயல்பான பவுலிங்கை எப்போதும்போல வீசுமாறு அறிவுறுத்தினேன் என்று சாஹல் கூறியுள்ளார்.