அந்த பையன் பொல்லார்டை நினைவுபடுத்துகிறார்.. இளம் தமிழக வீரருக்கு சேவாக் புகழாரம்
பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடும் தமிழகத்தை சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் ஷாருக்கான் இளம் வயது பொல்லார்டை நினைவுபடுத்துகிறார் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த அதிரடி வீரரும் ஃபினிஷருமான ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு, ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், கெய்ல் என டாப் ஆர்டர் வலுவாகவுள்ள பஞ்சாப் அணிக்கு பூரனை தவிர மிடில் ஆர்டரில் தரமான அதிரடி வீரர் இல்லை என்பதால் ஃபினிஷர் ரோலுக்கு ஷாருக்கானை எடுத்தது.
ஆனால் ஷாருக்கானுக்கு பெரியளவில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு இன்னிங்ஸ் நன்றாக ஆடினார். 47 ரன்கள் அடித்து அசத்தினார். 6*, 47, 15*, 22, 13, 0, மற்றும் 4 இதுதான் இந்த சீசனில் ஷாருக்கான் அடித்த ரன்கள். அவரது கெரியரின் தொடக்க கட்டத்தில் தான் இருக்கிறார் என்பதால் அவர் அடிக்கும் ரன்கள் பெரிய விஷயமல்ல. ஆனால் அவரது பேட்டிங் நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது.
இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே, ஷாருக்கான் பயிற்சியில் பேட்டிங் ஆடுவதை பார்த்துவிட்டு, அவர் பொல்லார்டை நினைவுபடுத்துவதாக அவர் ஆடும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதே கருத்தை சேவாக்கும் தெரிவித்துள்ளார். ஷாருக்கான் குறித்து பேசிய வீரேந்திர சேவாக், ஷாருக்கான் இளம் வயது பொல்லார்டை நினைவுபடுத்துகிறார்; குறிப்பாக ஐபிஎல்லில்.. இளம் வயது பொல்லார்டு மீதும் அணிகள் கவனம் செலுத்தின. காரணம், நின்ற இடத்தில் இருந்தே சிக்ஸர் அடிக்கும் திறன். பொல்லார்டு நின்ற இடத்தில் இருந்தே சிக்ஸர் விளாசுவார். ஷாருக்கானிடமும் அதே திறமை இருக்கிறது. அவர் சிறு சிறு இன்னிங்ஸ்கள் தான் ஆடியிருக்கிறார்; பெரிய இன்னிங்ஸ் ஆடியதில்லை. பின்வரிசையில் இறங்குவதால் அவரால் அவ்வளவுதான் ஆடமுடியும் என்று சேவாக் தெரிவித்தார்.