இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பிட்ச்சில் ஓட தடை செய்யப்பட்ட பகுதியில் ரன் ஓடினார். அதைக்கண்ட களநடுவர் விராட் கோலியை எச்சரித்தார். 

இந்தியா - இங்கிலாந்து இடையே இன்று நடந்துவரும் 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 336 ரன்களை குவித்தது. கேஎல் ராகுலின் அபார சதம்(108), விராட் கோலி(66), ரிஷப் பண்ட்(77) ஆகியோரின அரைசதம் மற்றும் கடைசி நேர ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் 50 ஓவரில் 336 ரன்களை குவித்தது இந்திய அணி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான்(4) மற்றும் ரோஹித் சர்மா(25) ஆகிய இருவருமே சொற்ப ரன்களில் அவுட்டானதால் 37 ரன்களுக்கே இந்திய அணி 2 விக்கெட்டை இழந்தது. அதன்பின்னர் கோலியும் ராகுலும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து முக்கியமான இன்னிங்ஸை ஆடினர். 3வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 121 ரன்களை குவித்தனர். மெதுவாக ஆடினாலும், இவர்களின் இந்த பார்ட்னர்ஷிப்பால் தான் இந்திய அணி 336 ரன்களை குவித்தது.

இந்த போட்டியில் விராட் கோலியும் ராகுலும் ஆடிக்கொண்டிருந்தபோது, ஒரு சிங்கிள் எடுக்க ஓடும்போது கோலி பிட்ச்சில் ஓட தடை செய்யப்பட்ட பிட்ச்சின் நடுப்பகுதியில் ரன் ஓடினார். அதைக்கண்ட களநடுவர் கோலியை எச்சரித்தார்.

சீனியர் வீரரான விராட் கோலிக்கு இது நன்றாக தெரியும். ஆனாலும் நடுபிட்ச்சில் ஓடினார் கோலி. இது தெரியாமல் ஓடியது என்று கூறமுடியாது. ஏனெனில் கணிசமான தூரம் நடு பிட்ச்சிலேயே ஓடினார் கோலி.