இந்த ஐபிஎல் சீசனுடன் ஆர்சிபி அணியின் கேப்டன்சியில் இருந்தும் விலகுகிறார் விராட் கோலி..! வீடியோ வெளியிட்ட கோலி
டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகப்போவதாக அறிவித்திருந்த விராட் கோலி, இந்த ஐபிஎல் சீசனுடன் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தாலும், இந்திய அணிக்கு ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்று கொடுக்காதது அவர் மீதான விமர்சனமாக உள்ளது.
3 விதமான இந்திய அணிகளுக்கும் கேப்டன்சி செய்துகொண்டு, பேட்டிங்கிலும் சோபித்துவந்த விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக சரியான ஃபார்மில் இல்லாமல் நன்றாக பேட்டிங் ஆடமுடியாமல் சொதப்பிவருகிறார். இந்நிலையில், தனது பணிச்சுமையை குறைத்துக்கொள்ளும் விதமாக டி20 உலக கோப்பைக்கு பிறகு, டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக கோலி அண்மையில் அறிவித்தார் விராட் கோலி.
இந்நிலையில், ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகப்போவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் 14வது சீசனின் 2வது பாதி தொடர் இன்று தொடங்கிய நிலையில், இந்த சீசனுடன் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்ற விமர்சனம் கோலி மீது இருந்துவரும் நிலையில், அதுவே பெரும் அழுத்தமாக உருவெடுத்து, அவரது பேட்டிங்கையும் பாதிக்கிறது. அடுத்த சீசனுக்கான மெகா ஏலமாக நடைபெறவுள்ளது. எனவே புதிய கேப்டனை மெகா ஏலத்தில் எடுக்கக்கூடிய வாய்ப்பு ஆர்சிபிக்கு இருக்கிறது. எனவே ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ள விராட் கோலி, ஆனால் ஐபிஎல்லில் கடைசி வரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடப்போவதாக தெரிவித்துள்ளார்.