Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை: விராட் கோலி வெறியாட்டம்.. பரபரப்பான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

virat kohli super batting helps india to beat pakistan by 5 wickets in t20 world cup
Author
First Published Oct 23, 2022, 5:33 PM IST

டி20 உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மெல்பர்னில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் ஆடவில்லை. ஸ்பின்னர்களாக அக்ஸர் படேல் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் ஆடினார்கள். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஷான் மசூத், ஹைதர் அலி, முகமது நவாஸ், ஷதாப் கான், இஃப்டிகார் அகமது, ஆசிஃப் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பாபர் அசாமை, 2வது ஓவரில் தனது பந்திலேயே வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். பாபர் அசாம் ரன்னே அடிக்காமல் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான ரிஸ்வானையும் 4 ரன்னுக்கு அனுப்பினார் அர்ஷ்தீப் சிங்.

அதன்பின்னர் ஷான் மசூத் மற்றும் இஃப்டிகார் அகமது இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த இஃப்டிகார் அகமது, 34 பந்தில் 51 ரன்கள் அடித்த நிலையில், அவரை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார் முகமது ஷமி. அதன்பின்னர் ஷதாப் கான்(5), ஹைதர் அலி(2) ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார்.  ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ஷான் மசூத் அரைசதம் அடித்தார். கடைசியில் ஷாஹீன் அஃப்ரிடி ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடிக்க, 20 ஓவரில் 159 ரன்கள் அடித்தது பாகிஸ்தான் அணி. - -

160 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவருமே தலா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். சூர்யகுமார் யாதவ் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் இறக்கப்பட்ட அக்ஸர் படேல் 2 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 

6.1 ஓவரில் 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தது. அதன்பின்னர் கோலியும் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் பேட்டிங்  ஆடினர். களத்தில் நிலைத்தபின்னர் அடித்து ஆடினர். கடைசி 2 ஓவரில் இந்திய அணிக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரை வீசிய ஹாரிஸ் ராஃப், முதல் 4 பந்தில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால் கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்களை விளாசினார் கோலி.

இதையடுத்து கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட முதல் 3 பந்தில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி 3 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட, 4வது பந்தில் சிக்ஸர் அடித்தார் கோலி. அந்த பந்து நோ பால் என்பதால் ஃப்ரீ ஹிட் கிடைத்தது. அதில் 3 ரன்கள் கிடைக்க, கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். கடைசி பந்தை அஷ்வின் எதிர்கொள்ள, அதை வைடாக வீசினார் நவாஸ். கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட பவுண்டரி அடித்து அஷ்வின் முடிக்க 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.  விராட் கோலி 53 பந்தில் 82 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios