India vs Sri Lanka: ஜடேஜா 175* ரன்கள்.. முதல் இன்னிங்ஸில் 574 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது இந்தியா
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது இந்திய அணி.
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இது. விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி இதுவாகும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 10 ஓவரில் 52 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக விளையாடி கொண்டிருந்த ரோஹித் சர்மா, 28 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் அடித்த நிலையில் 10வது ஓவரில் ஆட்டமிழந்தார். மயன்க் அகர்வாலும் 33 ரன்னில் ஆட்டமிழக்க, 80 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.
3ம் வரிசையில் ஹனுமா விஹாரி இறங்கினார். 2 விக்கெட் விழுந்தபிறகு, விராட் கோலி களத்திற்கு வந்தார். விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி இதுவென்பதால், 2 ஆண்டுகளாக சதத்தின் தேடலில் இருக்கும் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப கோலியும் நல்லவிதமாக தொடங்கினார். ஹனுமா விஹாரியும் கோலியும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடி 90 ரன்களை சேர்த்தனர். களத்தில் நன்றாக செட்டில் ஆகியிருந்த விராட் கோலியை 45 ரன்னில் எம்பல்டேனியா வீழ்த்த, ஹனுமா விஹாரி 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன்னில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 97 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 96 ரன்களை குவித்து 4 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடிய ரிஷப் பண்ட் 4 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
332 ரன்களுக்கு இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதன்பின்னர் ஜடேஜாவும் அஷ்வினும் இணைந்து அபாரமாக விளையாடினர். ஜடேஜா சிறப்பாக ஆட, அஷ்வின் அடித்து ஆடி வேகமாக ஸ்கோரை உயர்த்தினர். அஷ்வின் அரைசதம் அடிக்க, ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 2வது சதத்தை பதிவு செய்தார். இருவரும் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 130 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த அஷ்வின் 61 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஜெயந்த் யாதவ், 2 ரன்னில் வெளியேறினார்.
இந்திய அணியின் ஸ்கோர் 471 ரன்களாக இருந்தபோது ஜெயந்த் யாதவ் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் 8வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த ஷமி, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். ஜடேஜா - ஷமி இடையேயான பார்ட்னர்ஷிப்பில் முதல் 50 ரன்களில் ஷமி ஒரு ரன் கூட அடிக்கவில்லை. 50 ரன்களையும் ஜடேஜா தான் அடித்தார். ஆனால் அதன்பின்னர் ஷமியும் அடிக்க ஆரம்பிக்க, அவரிடம் ஸ்டிரைக்கை கொடுத்தார் ஜடேஜா. ஜடேஜா 175 ரன்கள் அடித்து களத்தில் நிற்க, இந்திய அணியின் ஸ்கோர் 574 ரன்களாக இருந்தபோது கேப்டன் ரோஹித் சர்மா முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். ஷமி 20 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் அடித்த நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.