அபினவ், அபரஜித் பொறுப்பான பேட்டிங்.. ஃபைனலில் பேட்டிங்கில் சொதப்பிய தமிழ்நாடு.. கர்நாடகாவுக்கு எளிய இலக்கு
விஜய் ஹசாரே தொடரின் இறுதி போட்டியில் கர்நாடக அணிக்கு எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது தமிழ்நாடு அணி.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி 252 ரன்கள் மட்டுமே அடித்தது. அபினவ் முகுந்தும் முரளி விஜயும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முரளி விஜய் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த அஷ்வின் வெறும் 8 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் அபினவ் முகுந்துடன் பாபா அபரஜித் ஜோடி சேர்ந்தார்.
அபினவும் அபரஜித்தும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தனர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த அபினவ் 85 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் அபரஜித் 66 ரன்களில் ரன் அவுட்டாக, ஒரு சிக்ஸர் 2 பவுண்டரியுடன் 35 ரன்கள் அடித்து விஜய் சங்கரும் ஆட்டமிழந்தார்.
தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் சரியாக ஆடவில்லை. ஷாருக்கான் தன் பங்கிற்கு 27 ரன்கள் சேர்த்தார். அபினவ், அபரஜித்தை தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை. அதனால் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தமிழ்நாடு அணி. கர்நாடக அணிக்கு 253 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இதெல்லாம் ஈசியான ஸ்கோர். 280 ரன்களுக்கு மேல் அடித்தால்தான் டிஃபெண்ட் செய்ய முடியும். எனினும் தமிழ்நாடு அணி என்ன செய்கிறது என்பதை பார்ப்போம்.