Nivethan Radhakrishnan: ஆஸி., U19 அணியில் தமிழ் பையன்.. 2 கைகளிலும் பந்துவீசுவதை பார்த்து கொத்தா தூக்கிய ஆஸி.,
அண்டர் 19 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அண்டர் 19 அணியில் தமிழகத்தை சேர்ந்த 2 கைகளிலும் பந்துவீசும் அபார திறமைசாலி ஸ்பின்னரான நிவேதன் ராதாகிருஷ்ணன் இடம்பிடித்துள்ளார்.
14வது அண்டர் 19 உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில் வரும் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 5 வரை நடக்கவுள்ளது. 16 அணிகள் கலந்துகொள்ளும் இந்த அண்டர் 19 உலக கோப்பை தொடர் ஆண்டிகுவா & பார்புடா, கயானா, செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ், டிரினிடாட் & டொபாகோ ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது.
இந்த அண்டர் 19 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலியா அண்டர் 19 அணியில் தமிழகத்தை சேர்ந்த நிவேதன் ராதாகிருஷ்ணன். தமிழ்நாடு சூப்பர் லீக் தொடரில் காரைக்குடி காளைஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகளில் ஆடியுள்ள நிவேதன், உள்நாட்டு தொடர்களில் தமிழ்நாடு அணிக்காகவும் ஆடியுள்ளார். ஐபிஎல் 14வது சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணியின் நெட் பவுலராகவும் இருந்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த நிவேதன் ராதாகிருஷ்ணன், ஆஸ்திரேலியாவில் குடியேறி இவ்வளவு சீக்கிரமாக ஆஸ்திரேலிய அண்டர் 19 அணியில் இடம்பெறுவதற்கு காரணம், அவரது அதீத திறமை தான். ஸ்பின்னரான நிவேதன் ராதாகிருஷ்ணன், இடது மற்றும் வலது ஆகிய 2 கைகளிலும் பந்துவீசும் அதீத திறமைக்காரர். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வலது கையில் ஆஃப் ஸ்பின்னும், வலது கை பேட்ஸ்மேன்களுக்கு இடது கை ஆர்தோடக்ஸ் (இடது கை ஆஃப் ஸ்பின்) ஸ்பின்னும் வீசக்கூடியவர் நிவேதன் ராதாகிருஷ்ணன்.
இவரது அதீத திறமையை கண்ட ஆஸ்திரேலிய அணி, அவரை இழந்துவிடாமல் அப்படியே வாரிச்சுருட்டி அண்டர் 19 அணியில் எடுத்தது. சிறுவயதிலிருந்து கிரிக்கெட் பார்த்துவரும் தனக்கு, யாருமே 2 கைகளிலும் பந்துவீசாததால், அதை செய்ய விரும்பி அதற்காக கடுமையாக உழைத்ததாக தெரிவித்துள்ளார் நிவேதன்.