IPL 2021 பவுலிங்கில் பட்டைய கிளப்பிய ஹேசில்வுட், பிராவோ..! சிஎஸ்கேவிற்கு எளிதான இலக்கை நிர்ணயித்த சன்ரைசர்ஸ்
சிஎஸ்கேவிற்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவரில் 134 ரன்கள் அடித்து, 135 ரன்கள் என்ற எளிய இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. ஷார்ஜாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 7 பந்தில் வெறும் 2 ரன் மட்டுமே அடித்து ஹேசில்வுட்டின் பந்தில் ஆட்டமிழக்க, கேப்டன் வில்லியம்சனை 11 ரன்னில் வீழ்த்தினார் பிராவோ.
வில்லியம்சனை வீழ்த்திய பிராவோ, இளம் வீரர் பிரியம் கர்க்கையும் 7 ரன்னில் வீழ்த்தினார். அருமையாக பந்துவீசிய பிராவோ, ரன்னும் விட்டுக்கொடுக்காமல் விக்கெட்டும் வீழ்த்தினார் பிராவோ.
அதன்பின்னர் இளம் வீரர்கள் அப்துல் சமாத் மற்றும் அபிஷேக் ஷர்மா இணைந்து அருமையாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை மெதுவாக உயர்த்தினர். அவர்கள் இருவரும் நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார் ஹேசில்வுட். ஹோல்டரும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசியில் ரஷீத் கான் 2 பவுண்டரிகளுடன் 13 பந்தில் 17 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 134 ரன்கள் மட்டுமே அடித்த சன்ரைசர்ஸ் அணி, 135 ரன்கள் என்ற எளிய இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது. இதை சிஎஸ்கே அணி எளிதாக அடித்து ஜெயித்துவிடும்.