#DCvsSRH நடராஜனுக்கு கொரோனா உறுதி.. இன்றைய ஐபிஎல் போட்டி நடப்பதில் சிக்கல்? பிசிசிஐ கூறுவது என்ன?
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஐதராபாத் அணியில் விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த வீரர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப் பந்துவீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் 14வது சீசனின் 2வது பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று துபாயில் நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும் மோதுகின்றன. டெல்லி கேபிடள்ஸ் அணி இந்த சீசனின் முதல் பாதியில் 8 போட்டிகளில் ஆடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்றது. ஆனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியோ, ஆடிய 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எனவே சன்ரைசர்ஸ் அணிக்கு ஒரு வெற்றி அவசியம் தேவைப்படுகிறது. வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் அணி, வலுவான டெல்லி அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஐதராபாத் அணியில் விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த வீரர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
நடராஜனுடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர், விஜய் குமார் (அணி மேலாளர்), ஷ்யாம் சுந்தர் (பிசியோதெரபிஸ்ட்), அஞ்சனா வன்னா (மருத்துவர்), துஷார் கேத்கர் (லாஜிஸ்டிக்ஸ் மேலாளர்), வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர் பி. கணேசன் ஆகியோரும் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதனால், இன்றைய ஆட்டம் நடக்குமா, நடக்காதா? எனக் கேள்வி எழுந்த நிலையில், போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.