IPL 2021 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடராஜனுக்கு மாற்று வீரரை அறிவித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஃபாஸ்ட் பவுலர் நடராஜனுக்கு மாற்று வீரராக ஜம்மு காஷ்மீர் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 14வது சீசனின் 2ம் பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் இந்தியாவில் நடந்த முதல் பாகத்தில் ஆடிய 7 போட்டிகளில் 6 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் அணியின் தோல்வி முகம் தொடர்கிறது.
அமீரகத்தில் நடக்கும் 2ம் பாக ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது சன்ரைசர்ஸ் அணி.
அந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் இடது கை நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் நடராஜன், டெல்லிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், அவர் அந்த போட்டியில் ஆடவில்லை. அவர் உட்பட அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த விஜய் சங்கர் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப் 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நடராஜனுக்கு தற்காலிக மாற்று வீரராக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சன்ரைசர்ஸ் அணியின் நெட் பவுலராக அமீரகம் சென்ற நிலையில், நடராஜன் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு மாற்று வீரராக உம்ரான் மாலிக் அறிவிக்கப்பட்டுள்ளார். ஃபாஸ்ட் பவுலரான உம்ரான் மாலிக் பேட்டிங்கும் ஆடத்தெரிந்தவர். அவர் ஆல்ரவுண்டராக அறிவிக்கப்பட்டிருப்பதால், அவருக்கு சன்ரைசர்ஸ் அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.