#BANvsSL கேப்டன் குசால் பெரேராவின் அபார சதத்தால் வங்கதேசத்திற்கு கடின இலக்கை நிர்ணயித்த இலங்கை
கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, கேப்டன் குசால் பெரேராவின் அதிரடி சதத்தால் 50 ஓவரில் 286 ரன்களை குவித்து 287 ரன்கள் என்ற கடின இலக்கை வங்கதேசத்திற்கு நிர்ணயித்துள்ளது.
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவரும் நிலையில், முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்டது வங்கதேச அணி.
கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இலங்கையை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் வங்கதேசமும், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் இலங்கையும் களம் கண்டுள்ளன.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான குசால் பெரேரா, அபாரமாக ஆடி சதமடித்தார். அவருடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்த குணதிலகா 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் நிசாங்கா ரன்னே அடிக்காமலும், குசால் மெண்டிஸ் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய கேப்டன் குசால் பெரேரா சதமடித்தார். 122 பந்தில் 120 ரன் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தனஞ்செயா டி சில்வா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து 55 ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருக்க, 50 ஓவரில் 286 ரன்கள் அடித்து 287 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்த நிலையில், அந்த இலக்கை வங்கதேசம் விரட்டிவருகிறது.