அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்ட இலங்கை வீரர் திடீர் ஓய்வு..!
இலங்கை அணியின் இடது கை ஃபாஸ்ட் பவுலர் இசுரு உடானா திடீரென ஓய்வு அறிவித்துள்ளார்.
இலங்கை அணியின் இடது கை ஃபாஸ்ட் பவுலர் இசுரு உடானா. 2009ம் ஆண்டு டி20 கிரிக்கெட்டிலும், 2012ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டிலும் அறிமுகமான இசுரு உடானா, 21 ஒருநாள் போட்டிகள் மற்றும் 34 டி20 போட்டிகளில் ஆடி முறையே 18 மற்றும் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இசுரு உடானாவின் கிரிக்கெட் கெரியர் வெற்றிகரமானதாக இல்லை. அவர் அறிமுகமானதிலிருந்தே அணியில் எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாகவே இருந்தார். அண்மையில் கூட இந்தியாவுக்கு எதிராக ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடினார். அதிலும் விக்கெட்டே வீழ்த்தாமல் அதிக ரன்களை வாரிக்கொடுத்தார்.
அதற்கு முந்தைய தொடரிலும் இசுரு உடானா சோபிக்கவில்லை. அதனால் அவருக்கு அணியில் இடம் கிடைப்பதே கடினமாக இருந்தது. தொடர்ச்சியாக அவர் அணியில் எடுக்கப்படாமல் இருந்தார். இந்நிலையில், 33 வயதாகும் இசுரு உடானா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று திடீரென அறிவித்தார்.