#BANvsSL கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி..!
வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 97 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இலங்கை அணி.
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் 2 போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்த இலங்கை அணி, ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில், கடைசி போட்டியில் களமிறங்கியது.
இன்று தாக்காவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான குசால் பெரேரா, அபாரமாக ஆடி சதமடித்தார். அவருடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்த குணதிலகா 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் நிசாங்கா ரன்னே அடிக்காமலும், குசால் மெண்டிஸ் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய கேப்டன் குசால் பெரேரா சதமடித்தார். 122 பந்தில் 120 ரன் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தனஞ்செயா டி சில்வா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து 55 ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருக்க, 50 ஓவரில் 286 ரன்கள் அடித்தது.
287 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை அணியின் ஃபாஸ்ட் பவுலர் துஷ்மந்தா சமீராவின் பவுலிங்கில் விக்கெட்டுகளை இழந்த வங்கதேச வீரர்கள், சமீராவிடம் மட்டுமே 5 விக்கெட்டுகளை இழந்தனர்.
வங்கதேச அணியில் மொசாடெக் ஹுசைன், மஹ்மதுல்லா ஆகிய இருவர் மட்டுமே அரைசதம் அடித்தனர். அவர்களும் அரைசதம் அடித்த மாத்திரத்திலேயே ஆட்டமிழந்தனர். மொசாடெக் ஹுசைன் 51 ரன்னிலும், மஹ்மதுல்லா 53 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அவர்களுக்கு மற்ற வீரர்கள் யாருமே ஒத்துழைப்பு கொடுத்து ஆடவில்லை. சீனியர் வீரர்கள் ஷகிப் அல் ஹசன்(4), முஷ்ஃபிகுர் ரஹீம்(28) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து 43வது ஓவரில் 189 ரன்களுக்கே வங்கதேச அணி ஆல் அவுட்டானது.
இதையடுத்து 97 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது. 2-1 என வங்கதேச அணி ஒருநாள் தொடரை வென்றது.