ஐபிஎல்லில் ஆடலைனாலும் முழு சம்பளத்தை பெறும் ஷ்ரேயாஸ் ஐயர்..! இதுதான் காரணம்
ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல்லில் ஆடவில்லை என்றாலும், அவரது முழு ஊதியத்தையும் அவர் பெறுவார்.
ஐபிஎல் 14வது வரும் 9ம் தேதி தொடங்குகிறது. அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. ஐபிஎல்லில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இந்த சீசனில் ஆடவில்லை. ஆல்ரவுண்டர் அக்ஸர் படேலுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. எனவே அவர் குறைந்தது 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால் அவரும் முதல் ஒருசில போட்டிகளில் ஆட முடியாது.
ஷ்ரேயாஸ் ஐயர் ஆடாததால் இந்த சீசனில் ரிஷப் பண்ட் அணியை வழிநடத்தவுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோள்பட்டையில் காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு வரும் 8ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. அதன்பின்னர் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால், செப்டம்பர் மாதம் தான் மீண்டும் களம் காண்பார். அதனால் ஐபிஎல்லில் அவர் ஆடவில்லை.
ஐபிஎல் முழுவதும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடாத போதிலும், பிசிசிஐ இன்சூரன்ஸ் பாலிஸி விதிப்படி, ஐபிஎல்லுக்கான முழு ஊதியமும் அவருக்கு வழங்கப்படும். பிசிசிஐயின் வருடாந்திர காண்ட்ராக்ட்டில் இடம்பெற்றுள்ள வீரர்கள், ஐபிஎல்லில் காயம் காரணமாக ஆடமுடியாமல் போனால், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். அந்தவகையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கான ரூ.7 கோடி அவருக்கு வழங்கப்படும்.