Asianet News TamilAsianet News Tamil

கபில் தேவ் நல்ல கேப்டன் இல்லையா? இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக அவரை நியமிங்க! அக்தரின் தனித்துவ தேர்வு

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் குறித்து ஷோயப் அக்தர் கருத்து கூறியுள்ளார்.
 

Shoaib Akhtar makes unique suggestion for Indias next test captain
Author
Chennai, First Published Jan 24, 2022, 5:32 PM IST

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்பு, டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகிவிட்டார்.

தோனிக்கு பிறகு 2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்ற விராட் கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, 40 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்தது. இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி.

விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து திடீரென விலகிய நிலையில், அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்பதுதான் பெரும் கேள்வியாக உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா தான் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் காயத்தால் ஆடாத காரணத்தால் தான் ராகுல் துணை கேப்டனாக செயல்பட்டார். 

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவே, டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மாவைத்தான் பிசிசிஐ கேப்டனாக நியமிக்கும். ஏனெனில் அவர் தான் கேப்டன்சியில் நல்ல அனுபவம் கொண்டவர். உடனடியாக கேப்டன்சியை ஏற்க தகுதியான வீரர்.

ஆனால் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நீண்டகாலம் கேப்டனாக இருக்கக்கூடிய வீரரைத்தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சில முன்னாள் வீரர்கள், ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய வீரர்களின் பெயர்களை பரிந்துரைக்கிறார்கள். ஆனால் அதுவெல்லாம் சரியாக வராது. ரோஹித்தைத்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் திடமாக கூறுகிறார்கள்.

இவ்வாறு இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து கூறிவரும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர் அவரது கருத்தை கூறியுள்ளார்.

ஸ்போர்ட்ஸ் டுடேவில் இதுகுறித்து பேசிய ஷோயப் அக்தர், ஃபாஸ்ட் பவுலர்களை ஏன் கேப்டனாக பார்க்க மறுக்குறீர்கள்? கபில் தேவ் ஃபாஸ்ட் பவுலர் தான்.. அவர் சிறந்த கேப்டனாக இருக்கவில்லையா? எந்தவகையில் பேட்ஸ்மேன்கள் ஃபாஸ்ட் பவுலர்களைவிட அறிவார்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. பாகிஸ்தான் அணிக்கு இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் கேப்டன்களாக இருந்திருக்கிறார்கள். 

ஃபாஸ்ட் பவுலர் எப்போதுமே வெற்றிக்காகவே ஆடுவார். அதற்காக பேட்ஸ்மேன்கள் வெற்றிக்காக ஆடமாட்டார்கள் என நான் கூறவில்லை. ஆனால் கொஞ்சம் வித்தியாசமுண்டு. பும்ராவை துணை கேப்டனாக நியமித்து அடுத்த கேப்டனாக தயார் செய்யலாம். ஃபாஸ்ட் பவுலர்களையும் ஆல்ரவுண்டர்களையும் கேப்டன்களாக உருவாக்க வேண்டும். பேட்ஸ்மேன்களை மட்டுமே கேப்டனாக நியமிக்கும் டிரெண்ட் தவறானது என்று அக்தர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios