சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, அவரது தந்தை உயிரிழந்ததால் ஐபிஎல்லில் இருந்து வெளியேறியுள்ளார். 

ஐபிஎல் 14வது சீசனின் 2வது பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஐபிஎல் முடிந்ததும் டி20 உலக கோப்பை நடக்கவிருப்பதால் இங்கிலாந்து வீரர்கள் பலரும் அதற்கு தயாராகும் விதமாக ஐபிஎல்லில் இருந்து விலகினர். ஆஸ்திரேலிய வீரர்கள் சிலரும் விலகினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து அப்படி வெளியேறிய வீரர்களுக்கு மாற்று வீரர்களை ஐபிஎல் அணிகள் அறிவித்தன. சன்ரைசர்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோ விலகிய நிலையில், அவருக்கு மாற்று வீரராக வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டை ஒப்பந்தம் செய்தது சன்ரைசர்ஸ் அணி.

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆடும் லெவனில் ரூதர்ஃபோர்டுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவர் சன்ரைசர்ஸ் அணியுடன் இருந்துவந்தார். இந்நிலையில், அவரது தந்தை உயிரிழந்துவிட்டார். இதையடுத்து உடனடியாக ஐபிஎல்லில் இருந்து விலகி வெஸ்ட் இண்டீஸுக்கு சென்றுவிட்டார் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு.

இதுதொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெளியிட்டுள்ள பதிவில், ரூதர்ஃபோர்டின் தந்தை இறப்புக்கு சன்ரைசர்ஸ் அணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், இந்த நேரத்தில் ரூதர்ஃபோர்டு அவரது குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதால், அவர் ஐபிஎல்லில் இருந்து வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளது.