#ICCWTC இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு சரியான மாற்றுவீரர் அவருதான்..!
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு சரியான மாற்று ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் தான் என்று அவரது இளம் வயது பயிற்சியாளர் தினேஷ் லத் கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு கபில் தேவுக்கு அடுத்த சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக பார்க்கப்பட்டவர் ஹர்திக் பாண்டியா. அதிரடி பேட்டிங், அருமையான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அணியின் வெற்றிக்கு முழு பங்களிப்பை அளிக்கக்கூடிய வீரர் ஹர்திக் பாண்டியா.
ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் என்பதால் தான் ஹர்திக் பாண்டியாவிற்கு அணியில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் 2018 ஆசிய கோப்பையின்போது, முதுகுப்பகுதியில் அடைந்த காயத்திற்கு பிறகு, இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் திணறிவருகிறார் ஹர்திக் பாண்டியா. அதற்கு காரணம் அவர் பந்துவீசாததுதான்.
ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னெஸை கருத்தில்கொண்டு அவரது அவர் பந்துவீசவைக்கப்படுவதில்லை. பந்துவீசாததால் அவர் அணியில் எடுக்கப்படுவதுமில்லை. அண்மைக்காலமாக டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறவில்லை. அவர் இல்லாத டெஸ்ட் அணி நன்றாக செட்டாகி, வெற்றிகளை பெற்றுவருவதால் அவருக்கான அவசியமும் இல்லாமல் போய்விட்டது. அதனால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான அணியில் தனது இடத்தை இழந்தார்.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்டர் இடத்தை ஷர்துல் தாகூர் நிரப்புவார் என்று அவரது சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள தினேஷ், ஒரு பயிற்சியாளராக, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியில் ஷர்துல் தாகூரை எடுக்க வேண்டும் என்பேன் நான். அண்மைக்காலமாக ஷர்துல் தாகூர் ஆடிய விதமே நான் இப்படி சொல்ல காரணம். நன்றாக பவுலிங் வீசுவார். பேட்டிங்கும் சிறப்பாக ஆடக்கூடியவர். எனவே அது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும். எனவே ஹர்திக் பாண்டியா இல்லாததால் அந்த ஆல்ரவுண்டர் இடத்தை ஷர்துல் நிரப்புவார். ஆல்ரவுண்டர் ரோலை சிறப்பாக செய்வார் ஷர்துல் தாகூர். ஆனால் வீரர்கள் தேர்வு என்பது அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்களின் முடிவு.
இந்திய அணியில் ஒரு நல்ல ஆல்ரவுண்டருக்கான இடம் காலியாக உள்ளது. எனவே ஷர்துல் தாகூர் அந்த ரோலுக்கான் நீண்டகால தீர்வாக இருப்பார். இந்திய அணிக்கு நல்ல ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் தேவை. அதற்கான வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் ஷர்துல் தாகூர் தான் என்று தினேஷ் கூறியுள்ளார்.