தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்திய ஷர்துல் தாகூர், டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தகர்த்தெறிந்தார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 50 ரன்கள் அடித்தார். அஷ்வின் 46 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி, ஷர்துல் தாகூரின் பவுலிங்கிடம் சரணடைந்தது. ஷர்துல் தாகூர் அருமையாக பந்துவீசி இந்திய அணிக்கு தேவைப்பட்ட போதெல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியை 229 ரன்களுக்கு சுருட்ட உதவினார். அபாரமாக பந்துவீசிய ஷர்துல் தாகூர் 61 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டீன் எல்கர் (28), கீகன் பீட்டர்சன் (62), வாண்டெர் டசன் (1), டெம்பா பவுமா (51), வெரெய்ன் (21), ஜான்சென் (21) மற்றும் லுங்கி இங்கிடி ஆகிய 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஷர்துல் தாகூர். 

இந்த அபாரமான பவுலிங்கின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை தகர்த்துள்ளார் ஷர்துல் தாகூர். 7/61 என்ற ஷர்துல் தாகூரின் பவுலிங் தான் தென்னாப்பிரிக்காவில் ஒரு இந்திய பவுலரின் மிகச்சிறந்த ஸ்பெல். இதற்கு முன்பாக 2010-2011 சுற்றுப்பயணத்தில் கேப்டவுனில் ஹர்பஜன் சிங்கின் 7/120 என்ற ஸ்பெல் தான் தென்னாப்பிரிக்காவில் இந்திய பவுலரின் சிறந்த பவுலிங்காக இருந்தது. ஹர்பஜன் சிங்கின் அந்த சாதனையை தகர்த்தார் ஷர்துல் தாகூர்.

மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய பவுலரின் சிறந்த பவுலிங் ரெக்கார்டை தன்னகத்தே கொண்டிருந்த அஷ்வினை (7/66) பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தார் ஷர்துல் தாகூர் (7/61).

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் அமைந்துள்ள வாண்டெரெர்ஸ் மைதானத்தில் சிறந்த பவுலிங்கை வைத்திருந்த இங்கிலாந்தின் மேத்யூ ஹாக்கார்டு (7/61) என்ற வீரரின் சாதனையை சமன் செய்துள்ளார் ஷர்துல் தாகூர் (7/61).