Asianet News TamilAsianet News Tamil

Kohli vs BCCI: இதை மட்டும் பண்ணுங்க.. கோலி - பிசிசிஐ பிரச்னைக்கு அஃப்ரிடி சொல்லும் தீர்வு

விராட் கோலி - பிசிசிஐ இடையேயான பிரச்னைக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி தீர்வு கூறியுள்ளார்.
 

shahid afridi suggesting solution to kohli vs bcci issue
Author
Chennai, First Published Dec 23, 2021, 2:43 PM IST

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். விராட் கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரமும், அதைச்சுற்றி நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக வெடித்தன.

விராட் கோலி திடீரென ஒருநாள் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் விமர்சனத்துக்குள்ளானது. ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர விரும்பிய கோலியை நீக்கியது விமர்சனத்துக்குள்ளானதால், அதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, விராட் கோலியை டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தினேன். ஆனால் அவர் அதை கேட்காமல் டி20 கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டார். வெள்ளைப்பந்து அணிகளை வெவ்வேறு கேப்டன்கள் வழிநடத்துவது சரியாக இருக்காது என்று தேர்வாளர்கள் கருதியதால், விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கங்குலி தெரிவித்திருந்தார்.

ஆனால் தென்னாப்பிரிக்காவிற்கு கிளம்புவதற்கு முன்பாக பிரஸ் மீட்டில் பேசிய விராட் கோலி, நான் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக கூறியபோது, அதை பிசிசிஐ தரப்பில் முழுமனதாக ஏற்றுக்கொண்டனர். கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று என்னிடம் யாரும் கூறவில்லை. என்னை ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்குவதாக கடைசி நேரத்தில் தான் தெரிவித்தனரே தவிர, முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றார் கோலி.

பிசிசிஐ தலைவர் கங்குலியின் கருத்துக்கு கோலியின் கருத்து முற்றிலும் முரண்பாடாக இருந்ததையடுத்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகவும் விவாதப்பொருளாகவும் உருவெடுத்தது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர். விராட் கோலியிடம் முன்கூட்டியே கேப்டன்சி நீக்கம் குறித்து தெரியப்படுத்தியிருக்கலாம் என்பதே முன்னாள் வீரர்கள் பலரது கருத்து. கோலி கேப்டன்சி நீக்கம் விவகாரம் குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கருத்து கூறிவருகின்றனர்.

அந்தவகையில் இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, இந்த விவகாரத்தை இன்னும் நன்றாக கையாண்டிருக்கலாம். கிரிக்கெட் வாரியத்தின் ரோல் மிக முக்கியமானது; ஒரு தந்தையை போன்ற ரோல் அது.  அணியின் நலனுக்காக தேர்வாளர்கள் ஏதேனும் திட்டங்களை வைத்திருந்தால், அந்த குறிப்பிட்ட வீரரை அழைத்து, இதுதான் எங்கள் திட்டம்.. உங்கள் கருத்து என்ன? என்று அந்த வீரரிடம் நேரடியாக பேசிவிட வேண்டும். அதுதான் நல்லது.

மீடியா மூலமாக கம்யூனிகேட் செய்தால் பிரச்னைகள் தான் வரும். நேருக்கு நேர் உட்கார்ந்து பேசினால் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும். பிரச்னைக்கு தீர்வு வேண்டுமென்றால், அதைத்தான் செய்ய வேண்டும் என்று அஃப்ரிடி கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios