Asianet News TamilAsianet News Tamil

நாட்டுக்காக ஆடும்போது தோனிக்கு கோபமே வரமாட்டேங்குது.. ஆனால் சிஎஸ்கேவுக்கு ஆடும்போது மட்டும் கோபம் பொத்துகிட்டு வருது!!

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை முன்னாள் வீரர் சேவாக் கடுமையாக சாடியுள்ளார்.

sehwag brutally criticize dhonis angry while he playing for csk
Author
India, First Published Apr 14, 2019, 3:37 PM IST

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் கடைசி பந்தில் சிஎஸ்கே அணி திரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. 

கடைசி ஓவரில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் இரண்டு பந்துகளில் 9 ரன்கள் எடுக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் தோனியை கிளீன் போல்டாக்கினார் ஸ்டோக்ஸ். எஞ்சிய 3 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்டோக்ஸ் 4வது பந்தை ஃபுல் டாஸாக வீசினார். ஆனால் அந்த பந்தை அம்பயர் நோ பால் என அறிவிக்க முயன்று கையை நீட்டிவிட்டார். ஆனால் ஃபுல் டாஸ் உயரமாக செல்லும் நோ பாலை லெக் அம்பயர் தான் அறிவிக்க வேண்டும். பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு இறங்கி ஆடியதால் அவர் நோ பால் இல்லை. அதனால் லெக் அம்பயர் நோ பால் கொடுக்கவில்லை. அதற்குள் அவசரப்பட்டு மற்றொரு அம்பயர் கையை நீட்டிவிட்டார். அதனால் பிரச்னை வெடித்தது. ஜடேஜா அம்பயருடன் வாக்குவாதம் செய்தார். அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே கேப்டன் தோனி மைதானத்துக்குள் நுழைந்து அம்பயர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அது நோ பாலா இல்லையா என்பது லெக் அம்பயர் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் மற்றொரு அம்பயர் அவசரப்பட்டதால் பிரச்னை வெடித்தது. போட்டி நடக்கும்போது வெளியில் இருக்கும் வீரர்களோ கேப்டனோ மைதானத்துக்குள் செல்லக்கூடாது. தோனி போட்டியின் இடையே மைதானத்துக்குள் சென்று அம்பயர்களுடன் வாதிட்டதால், ஐபிஎல் விதிமீறலுக்காக போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது. 

தோனியின் விதிமீறிய செயல் கடும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்தித்தது. தோனியின் செயலுக்கு பல முன்னாள் வீரர்களும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

sehwag brutally criticize dhonis angry while he playing for csk

இதுகுறித்து டுவீட் செய்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், தோனியின் செயலுக்கு ஆட்டத்துக்கு நல்லதல்ல. களத்துக்கு வெளியில் இருக்கும் கேப்டன் உள்ளே செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று பதிவிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். 

அம்பயர் நோ பால் கொடுத்தால்கூட, அந்த முடிவிலிருந்து பின்வாங்க அம்பயருக்கு உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில் தோனி இந்த விவகாரத்தை கையாண்ட விதம் ஆச்சரியமளிக்கிறது என்று ஹேமங் பதானி தெரிவித்திருந்தார்.

இந்த ஐபிஎல் சீசனில் அம்பயர்களின் செயல்பாடுகள் சரியில்லை. நோ பால் கொடுக்கப்பட்டு பின்னர் அந்த முடிவு வாபஸ் பெறப்பட்டது. எனினும் எதிரணியின் கேப்டனான தோனி களத்திற்குள் செல்வதற்கு உரிமையில்லை. தோனி தவறான முன்னுதாரணத்தை அமைத்து கொடுத்துள்ளார் என்று ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்தார். 

நினைத்த போதெல்லாம் களத்துக்குள் செல்வதற்கு இது ஒன்றும் ஊரில் ஆடும் கிரிக்கெட் அல்ல. தோனி அவ்வப்போது தான் ஒரு வீரர் என்பதை மறந்துவிட்டு ஆஃபிசர் போல நடந்துகொள்கிறார். வீரர்களால் அம்பயர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதை தோனி உணர வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் டைட் கடுமையாக விமர்சித்திருந்தார். 

இவ்வாறு பலரும் பலவிதமாக தங்களது எதிர்ப்பை பதிவுசெய்த நிலையில், தோனிக்கு ஆதரவாக முன்னாள் கேப்டன் கங்குலி குரல் கொடுத்தார். எல்லாருமே மனிதர்கள் தான்;(அதனால் சில தவறுகள் நடக்கத்தான் செய்யும் என்கிற ரீதியாக சொல்லியுள்ளார்) ஆனாலும் அதில்கூட தோனியின் போட்டி மனப்பான்மை வெளிப்பட்டது மிகச்சிறந்தது என்று தோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். 

இந்நிலையில், தோனிக்கு ஐபிஎல்லில் 2-3 போட்டிகள் ஆட தடை விதிக்க வேண்டுமென முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் அதிரடியாக வலியுறுத்தியுள்ளார். தோனி மைதானத்திற்குள் நுழைந்த விவகாரம் குறித்து பேசிய சேவாக், தோனியை எளிதாக விட்டுவிட்டதாக கருதுகிறேன். அவருக்கு குறைந்தது 2-3 ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்க வேண்டும். அப்பதான் மற்ற கேப்டன்களுக்கு பயம் இருக்கும். இல்லையெனில் தோனியை பார்த்து எதிர்காலத்தில் மற்ற கேப்டன்களும் மைதானத்திற்குள் நுழைய நேரிடும். அப்படி செய்தால், அம்பயர்களுக்கு என்ன மரியாதை? அதனால் தோனிக்கு சில ஐபிஎல் போட்டிகளில் ஆட தடைவிதிக்க வேண்டும். தோனிக்கு விதிக்கப்படும் தடை, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று சேவாக் மிகவும் காட்டமாக தெரிவித்தார் சேவாக். 

தோனிக்கு தடைவிதிக்க வேண்டும் என்பதுடன் சேவாக் நிறுத்தவில்லை. இந்திய அணிக்காக ஆடும்போது எந்த சூழலிலும் கோபப்படாமல் அமைதி காக்கும் தோனி, ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடும்போது இவ்வளவு கோபப்படுகிறார். இதே கோபத்தை இந்திய அணிக்காக ஆடும்போதும் காட்டியிருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால் அங்கு காட்டாமல் ஐபிஎல்லில் காட்டுகிறார். சென்னை அணிக்காக ஆடும்போது தோனி எமோஷனல் ஆகிறார் என்று சேவாக் கடுமையாக தாக்கியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios