சச்சின் இப்போது வலியுறுத்தும் விஷயத்தை ஓராண்டுக்கு முன்பே வலியுறுத்திய ஏசியாநெட் தமிழ்..!
சச்சின் டெண்டுல்கர், டி.ஆர்.எஸ் விதியில், அம்பயர் கால் என்ற முறையை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கிரிக்கெட்டில் அம்பயர்களின் பணி மிக முக்கியமானது மட்டுமல்லாது கடினமானதும் கூட. ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் அம்பயர் கொடுக்கும் ஒரு தவறான தீர்ப்பால், போட்டியின் முடிவே பலமுறை மாறியிருக்கின்றன.
குறிப்பாக எல்பிடபிள்யூ விஷயத்தில்தான், அம்பயர்களின் கணிப்பும் முடிவும் சில நேரங்களில் தவறாக அமைந்துவிடும். மனித தவறு நடப்பது வழக்கம்தான். அதனால் அம்பயர்களை குறை சொல்ல முடியாது என்றாலும், தவறான முடிவுகள் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன.
அதனால் தான் தொழில்நுட்ப உதவியுடன், தவறுகளை கலையும் நோக்கில், கள நடுவரின் முடிவை ரிவியூ செய்யும் விதமாக டி.ஆர்.எஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. டி.ஆர்.எஸ் முறையே, தவறுகளை கலைந்து சரியான தீர்ப்பை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டது தான். ஆனால் அதில் உள்ள ”அம்பயர் கால்” என்ற ஓட்டை, மீண்டும் அநீதியளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது.
பந்து பேட்ஸ்மேனின் கால்காப்பில் பட்டு, அதற்கு களநடுவர் அவுட் கொடுக்கவில்லையென்றால், பவுலிங் அணி டி.ஆர்.எஸ் எடுக்கும். அந்த பந்தின் பாதி பகுதிக்கு மேல் ஸ்டம்ப்பில் பட்டால்தான் தேர்டு அம்பயர் அவுட் கொடுப்பார். பந்தின் சிறு பகுதி மட்டுமே ஸ்டம்ப்பில் பட்டால், அம்பயர் கால் என்று கள நடுவரின் முடிவிற்கே விடப்படும்.
எல்பிடபிள்யூ விவகாரங்களில் பந்து ஸ்டம்பில் பட்டாலே அவுட் என்று கொடுக்க வேண்டும். பவுலர் ஸ்டம்புக்கு நேராக வீசிய பந்து பேட்ஸ்மேனின் கால்காப்பில் பட்டாலே அவுட் கொடுத்துவிட வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்.
எல்பிடபிள்யூ-வை பொறுத்தமட்டில் கள நடுவர்கள் எப்போதுமே 100% துல்லியமாக செயல்பட முடியாது என்பதால் தான் ரிவியூவே. ஆனால் ரிவியூவில் பந்தின் பாதி பகுதி ஸ்டம்பில் பட்டால், அம்பயர் கால் என்ற வகையில் கள நடுவரின் முடிவுக்கே விடப்படுகிறது. அப்படி செய்வதால், களநடுவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளை பொறுத்து வீரர்கள் வெளியேற வேண்டியோ அல்லது பவுலர்கள் வருத்தப்பட வேண்டியோ உள்ளது.
அம்பயர் கால் முறை தவறானது என்றும், அதை நீக்கிவிட்டு, பந்து ஸ்டம்பில் பட்டாலே அவுட் கொடுக்கும் விதமாக விதிமாற்றம் செய்ய வேண்டும் என்று, கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையில், ஒரே மாதிரியான பந்திற்கு கோலி(அரையிறுதியில்) அவுட்டாகி வெளியேறியதையும், ஜேசன் ராய்(இறுதி போட்டியில்) தப்பியதையும் சுட்டிக்காட்டி, ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் எழுதியிருந்தோம். அந்த கட்டுரையின் லிங்க் - ஐசிசி எந்த விதியை மாத்துதோ இல்லையோ.. ஆனால் அந்த ஒரு விதியை கண்டிப்பா மாத்தியே ஆகணும்
ஓராண்டுக்கு முன்(ஜூலை 16, 2019) அன்று நமது ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் வலியுறுத்தியிருந்த விஷயத்தை, இப்போது மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், பந்தின் எத்தனை சதவிகித பகுதி, ஸ்டம்பில் படுகிறது என்பதை எல்லாம் பார்க்காமல், பந்து ஸ்டம்பில் பட்டாலே அவுட் கொடுக்க வேண்டும். அம்பயர் கால் முறையை நீக்க வேண்டும் வலியுறுத்தியதுடன், பிரயன் லாராவுடன் இதுகுறித்து பேசிய வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.