இந்திய அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். 

இந்திய அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜ். 2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அறிமுக டெஸ்ட்டிலேயே அபாரமாக பந்துவீசி இந்திய அணியில் சீனியர் பவுலர்களுக்கு மத்தியில் தனக்கான இடத்தை வலுவாக பிடித்தார் சிராஜ்.

இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முகமது சிராஜ், இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். தனது அபாரமான வேகத்தின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிடுகிறார் சிராஜ்.

இந்நிலையில், முகமது சிராஜை லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் வெகுவாக புகழ்ந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் நல்ல விதமாக மதிப்பிட்டு பாராட்டிய ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகிய வீரர்கள் சர்வதேச அரங்கில் அசத்திவருகின்றனர். சச்சின் டெண்டுல்கரின் கணிப்பு சோடை போனதில்லை.

அந்தவகையில், இப்போது முகமது சிராஜை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். சிராஜ் குறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்ன் டெஸ்ட்டில் சிராஜ் அறிமுகமானபோது, அவர் அறிமுக போட்டியில் ஆடியதை போலவே இல்லை. அந்தளவிற்கு முதிர்ச்சியாக பந்துவீசினார். அவரது அடுத்தடுத்த ஸ்பெல்களை சிறப்பாக வீசிக்கொண்டே சென்றார். ஒவ்வொரு முறை நான் அவரை பார்க்கும்போதும் புதிதாக ஏதாவது ஒன்றை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.

அவரை பார்க்கும்போது அவரது கால்களில் ஸ்ப்ரிங் இருக்கிறதோ என்று தோன்றும். எப்போதுமே முழு எனர்ஜியுடன் இருப்பார். டெஸ்ட் போட்டியில் ஒருநாளின் கடைசி ஓவரை அவர் வீசும்போது கூட முதல் ஓவரை வீசுவதை போன்ற எனர்ஜியுடன் இருப்பார். சிராஜ் ஒரு முழுமையான ஃபாஸ்ட் பவுலர். அவரது உடல்மொழி எப்போதுமே பாசிட்டிவாகத்தான் இருக்கிறது. மிகவும் வேகமாக கற்றுக்கொள்கிறார் என்று சிராஜை வெகுவாக புகழ்ந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.