ஆஸ்திரேலியாவுக்கு எதிரா தரமான சம்பவம் பண்ண ஹிட்மேன்.. டிராவிட், தோனி, கோலிலாம் கூட செய்யல.. சச்சினுக்கு அடுத்து ரோஹித் தான்
உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் போட்டியில் ரோஹித் சர்மா சிறப்பான ஒரு சம்பவத்தை செய்துள்ளார்.
உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் போட்டியில் ரோஹித் சர்மா சிறப்பான ஒரு சம்பவத்தை செய்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் தவானும் இணைந்து அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.
15 ஓவர்களை கடந்து இருவரும் சிறப்பாக ஆடிவருகின்றனர். அவசரப்படாமல் நிதானமாகவும் அதேநேரத்தில் ரன்ரேட் குறைந்துவிடாத அளவிற்கும் ஆடிவருகின்றனர். இந்த போட்டியில் 30 ரன்களை கடந்து ஆடிவரும் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்களுக்கு மேல் அடிக்கும் வீரர் ரோஹித் சர்மா தான். சச்சின் டெண்டுல்கர், ஹெய்ன்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோருக்கு அடுத்தபடியாக நான்காவது வீரராக இந்த மைல்கல்லை ரோஹித் சர்மா எட்டியுள்ளார். சச்சினுக்கு அடுத்த இரண்டாவது இந்திய வீரர் ரோஹித் சர்மா. ராகுல் டிராவிட், கங்குலி, தோனி, கோலி ஆகியோர் கூட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்களை அடிக்கவில்லை. சர்வதேச அளவில் ஏகப்பட்ட சிறந்த வீரர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் ரோஹித்துக்கு முன்னதாக சச்சின், விவியன், ஹெய்ன்ஸ் ஆகியோரை தவிர யாருமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்களை குவிக்கவில்லை.
ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, முதல் இரட்டை சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் அடித்தார். அதுமட்டுமல்லாமல் 2013ம் ஆண்டு இந்தியாவில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்து ஆடிய தொடரில் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதங்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.