IPL 2021 ஐபிஎல்லில் முதல் பேட்ஸ்மேன்.. வரலாற்று சாதனை படைத்த ரோஹித் சர்மா..!
ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோஹித் சர்மா.
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் ஆடிவருகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடிவரும் நிலையில், மும்பை அணி கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா அதிரடியாக அடித்து ஆடிவருகிறார்.
இந்த போட்டிக்கு முன்பாக, ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்கு எதிராக 982 ரன்களை குவித்திருந்தார் ரோஹித் சர்மா. இந்நிலையில், இந்த போட்டியில் 18 ரன்களை கடந்தபோது, ஐபிஎல்லில் கேகேஆருக்கு எதிராக 1000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா, ஐபிஎல்லில் ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில், ரோஹித்துக்கு அடுத்து 2 மற்றும் 3 ஆகிய இடங்களிலும் டேவிட் வார்னர் இருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 943 ரன்களையும், கேகேஆர் அணிக்கு எதிராக 915 ரன்களையும் குவித்துள்ளார் வார்னர்.