இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரோஹித்தும் ராகுலும் பதின்ம ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில், 4வது டெஸ்ட் இன்று லண்டன் ஓவலில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 2 மாற்றங்களுடன் களமிறங்கியது. இந்திய அணியில் இஷாந்த் சர்மா மற்றும் ஷமி ஆகிய ஃபாஸ்ட் பவுலர்களுக்கு பதிலாக உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் களமிறக்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் சாம் கரன் ஆகிய இருவருக்கு பதிலாக ஆலி போப் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 11 ரன்னில் கிறிஸ் வோகின் பந்தில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். இந்த ஆண்டில் தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆடும் வோக்ஸ், தனது முதல் ஓவரிலேயே ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ரோஹித் ஆட்டமிழந்த பிறகு ராகுல் மற்றும் புஜாரா ஆகிய இருவருமே ஒரு ரன் அடிக்கவே திணறிய நிலையில், ரோஹித் ஆட்டமிழந்த பிறகு ஒரு ரன் கூட அடிக்காமல், 17 ரன்னில் ராபின்சன் பந்தில் ஆட்டமிழந்தார் ராகுல்.

28 ரன்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், புஜாராவும் கோலியும் இணைந்து ஆடிவருகின்றனர். புஜாரா - கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டயாம் இருக்கிறது.