IPL 2021 சிஎஸ்கே அணி ஸ்மார்ட் பவுலிங்.. ஆர்சிபியை குறைந்த ரன்னுக்கு சுருட்டிய சிஎஸ்கேவின் வெற்றி உறுதி
சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, 20 ஓவரில் 156 ரன்கள் அடித்து 157 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபியும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. சிறிய மைதானமான ஷார்ஜாவில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணிக்கு தொடக்க வீரர்கள் விராட் கோலியும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து சிறந்த தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கோலி - படிக்கல் ஆகிய இருவருமே அரைசதம் அடித்து, முதல் விக்கெட்டுக்கு 111 ரன்களை குவித்து கொடுத்தனர்.
அருமையாக ஆடி நன்றாக செட்டில் ஆன கோலி, அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்துவிட்டார். அதன்பின்னர் ஆர்சிபி அணியின் ரன் வேகம் அப்படியே குறைந்துவிட்டது. பிராவோ வழக்கம்போலவே ஸ்லோ டெலிவரி, ஸ்லோ யார்க்கர், ஸ்லோ பவுன்ஸர் என நல்ல வேரியேஷனில் வீசி ரன் வேகத்தை கட்டுப்படுத்த, அதே ஐடியாவையே ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோரும் பின்பற்ற, பவுண்டரி, சிக்ஸர்களை அவ்வளவு எளிதாக அடிக்கமுடியாத விரக்தியில் ஆர்சிபி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
டிவில்லியர்ஸ் 12 ரன்னிலும், மேக்ஸ்வெல் 11 ரன்னிலும், டிம் டேவிட் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அபாரமாக ஆடி அரைசதம் அடித்த படிக்கல் 70 ரன்னில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 156 ரன்கள் மட்டுமே அடித்தது ஆர்சிபி அணி.
சிறிய மைதானமான ஷார்ஜாவில் குறைந்தது 200 ரன்களாவது அடித்தால்தான் வெற்றி பெற முடியும். 157 ரன்கள் என்பது சிஎஸ்கே அணிக்கு மிக எளிதான இலக்கு ஆகும்.