ஏபி டிவில்லியர்ஸின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 171 ரன்கள் அடித்த ஆர்சிபி அணி, 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் ஆடிவருகின்றன. அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், ஆர்சிபியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் விராட் கோலியை 12 ரன்னில் ஆவேஷ் கான் போல்டாக்கி அனுப்ப, மற்றொரு தொடக்க வீரரான தேவ்தத் படிக்கல்லை 17 ரன்னில் இஷாந்த் ஷர்மா கிளீன் போல்டாக்கினார். அபாயகராமான மேக்ஸ்வெல்லை 25 ரன்னில் அமித் மிஷ்ரா வீழ்த்த, அதன்பின்னர் ரஜாத் பட்டிதரும் டிவில்லியர்ஸும் இணைந்து சிறப்பாக ஆடினர்.

அதிரடியாக ஆடி 22 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் அடித்த ரஜாத் பட்டிதரை அக்ஸர் படேல் வீழ்த்த, அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ், 35 பந்தில் அரைசதம் அடித்தார். டெத் ஓவரில் 220 ஸ்டிரைக் ரேட்டை வைத்திருக்கும் டிவில்லியர்ஸை, ஆவேஷ் கான் 17 மற்றும் 19வது ஓவர்களை கட்டுக்கோப்பாக வீசி பெரிதாக ரன் கொடுக்காமல் கட்டுப்படுத்தினார்.

ஆனால் மார்கஸ் ஸ்டோய்னிஸ் வீசிய கடைசி ஓவரை பயன்படுத்திக்கொண்ட டிவில்லியர்ஸ், அந்த ஓவரில் 3 சிக்ஸர்களை விளாச, 20 ஓவரில் ஆர்சிபி அணி 171 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை அடித்து, 172 ரன்கள் என்ற இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.