கொரோனா 2ம் அலை: ஆர்சிபி அணி உரிமையாளர் ரூ.45 கோடி நிதியுதவி
கொரோனா 2ம் அலையை சமாளிக்க ஆர்சிபி அணி உரிமையாளரும் டியாஜியோ இந்தியா நிறுவன உரிமையாளருமான அனந்த் க்ரிபாலு ரூ.45 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய தென்மாநிலங்களில் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. இந்தியாவில் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதன் விளைவாக தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். ஆனாலும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளதால், படுக்கை தேவை, ஆக்ஸிஜன் தேவை, ஆக்ஸிஜன் படுக்கை தேவை ஆகியவை அதிகமாக உள்ளது. ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய இந்திய அரசு, ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரித்து ஈடுகட்டிவருகிறது.
கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள, பல தரப்பினரும் தங்களால் முடிந்த நிதி உதவியோ, பொருள் உதவியோ செய்துவருகின்றனர். மேலும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்கி கொடுப்பது போன்ற உதவிகளையும் செய்துவருகின்றனர்.
ஐபிஎல் 14வது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், ஐபிஎல்லில் ஆடிய வீரர்கள், ஐபிஎல் அணிகளின் சார்பிலும் நிதியுதவி செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆர்சிபி அணியின் உரிமையாளரான Diageo இந்தியா நிறுவன உரிமையாளர் அனந்த் க்ரிபாலு ரூ.45 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். ஆர்சிபி உரிமையாளரான இந்நிறுவனத்தின் சார்பில், இந்தியாவில் 21 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது. சிறிய மருத்துவமனைகளில் படுக்கை வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போது ரூ.45 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.