ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளுக்கான ஆர்சிபி அணியில் இணைந்துள்ள வனிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்தா சமீரா ஆகிய இருவரும் ஆர்சிபி அணிக்கு பெரியளவில் உதவிகரமாக இருப்பார்கள் என்று கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ஐபிஎல்லில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, ஐபிஎல் 14வது சீசனின் முதல் பாதியில் அருமையாக விளையாடி 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த சீசனின் எஞ்சிய போட்டிகள் நாளை(செப்டம்பர் 19) முதல் அமீரகத்தில் நடக்கிறது. இந்த சீசனின் முதல் பாதியை சிறப்பாக ஆடி முடித்துள்ள ஆர்சிபி, 2வது பாதியிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவிக்கும் முனைப்பில் உள்ள நிலையில், அந்த அணியில் ஆடிய ஆஸி., வீரர்களான ஆடம் ஸாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்ஸன் ஆகிய இருவரும் இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளனர்.

அவர்களுக்கு மாற்று வீரர்களாக இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்தா சமீரா ஆகிய இருவரையும் அணியில் எடுத்துள்ளது ஆர்சிபி.

இந்நிலையில், அமீரக கண்டிஷனை நன்கு அறிந்த மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறந்த அனுபவம் கொண்ட திறமையான வீரர்களான ஹசரங்கா மற்றும் சமீரா ஆகிய இருவரும் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய அளவில் உதவிகரமாக இருப்பார்கள் என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.