ஒரு கேப்டன் என்ற முறையில் என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கல..! ரோஷத்துடன் கேப்டன்சியிலிருந்து விலகிய ரஷீத் கான்
டி20 உலக கோப்பைக்கான அணி தேர்வில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தேர்வுக்குழுவும் ஒரு கேப்டன் என்ற முறையில் தன்னிடம் ஆலோசனை கேட்கவில்லை என்பதால், கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ரஷீத் கான்.
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.
அந்தவகையில், ரஷீத் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டது.
டி20 உலக கோப்பைக்கான ஆஃப்கானிஸ்தான் அணி:
ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான், ரஹ்மதுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), கரீம் ஜனத், ஹஸ்ரதுல்லா சேஸாய், குல்பாதின் நயீப், உஸ்மான் கனி, நவீன் உல் ஹக், அஸ்கர் ஆஃப்கான், ஹமீத் ஹசன், முகமது நபி, ஷரஃபுதின் அஷ்ரஃப், நஜிபுல்லா ஜட்ரான், தவ்லத் ஜட்ரான், ஹஷ்மதுல்லா ஷாஹிடி, ஷபூர் ஜட்ரான், முகமது ஷாஸாத்(விக்கெட் கீப்பர்), காயிஸ் அகமது.
ரிசர்வ் வீரர்கள் - அஃப்ஸர் சேஸாய், ஃபரீத் அகமது.
ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அணியின் கேப்டன் ரஷீத் கான் கேப்டன்சியை ராஜினாமா செய்தார். டி20 உலக கோப்பைக்கான ஆஃப்கானிஸ்தான் அணி தேர்வு குறித்து, ஒரு கேப்டன் என்ற முறையில் தன்னிடம் அணி தேர்வாளர்கள் கருத்து கேட்கவில்லை என்று கூறி கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் ரஷீத் கான்.
ரஷீத் கான் ராஜினாமா செய்ததையடுத்து, டி20 உலக கோப்பையில் முகமது நபி கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.