பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலியின் டுவீட், அவர் பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியிருந்த நிலையில், அவருக்கு பாஜக சார்பில் ராஜ்யசபா எம்பி சீட் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, 2019லிருந்து பிசிசிஐ தலைவராக இருந்துவருகிறார். பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகிய இருவரது பதவிக்காலமும் முடிவடைந்துவிட்ட நிலையில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படாததால் அவர்கள் இன்னும் அவர்களது பதவிகளில் நீடித்துவருகின்றனர்.
இந்நிலையில், சௌரவ் கங்குலி இன்று பதிவிட்ட டுவீட், அவர் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலகுகிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“1992ம் ஆண்டிலிருந்து கிரிக்கெட்டில் இருந்துவரும் எனக்கு இந்த 2022ம் ஆண்டு வரையிலான 30 ஆண்டுகள் சிறந்த பயணமாக அமைந்தது. கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. எனக்கு உங்கள் அனைவரது ஆதரவையும் பெற்று தந்திருக்கிறது. எனது கிரிக்கெட் கெரியரில் இன்று நான் இவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு எனக்கு ஆதரவாக இருந்தவர்கள், உதவியவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிறைய மக்களுக்கு பயனுள்ள விதத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை இன்று தொடங்குகிறேன். இப்போது போல் எப்போதும் உங்களது ஆதரவு இருக்கும் என நம்புகிறேன்” என்று கங்குலி பதிவிட்டிருந்தார்.
கங்குலியின் இந்த டுவீட் அவர் பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்வதை உறுதி செய்தது. ஆனால் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று சப்பை கட்டு கட்டினார்.
ஆனால், கங்குலி ராஜினாமா செய்வதற்கான காரணம் தெரியவந்துள்ளது. கங்குலி டுவீட் தொடர்பாக பிசிசிஐ வட்டாரத்தில் விசாரித்தபோது, ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு, இதுகுறித்த தெளிவு கிடைத்துள்ளது.
சௌரவ் கங்குலிக்கு மத்தியில் ஆளும் பாஜக, ராஜ்யசபா சீட்டை உறுதி செய்திருக்கிறது. எனவே தான் அவர் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் என்று பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பெயர் குறிப்பிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி இந்த தகவலை தெரிவித்தார்.
2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போதே, பாஜக சார்பில் சௌரவ் கங்குலியை போட்டியிட வைக்க பாஜக விரும்பியது. ஆனால் கங்குலி அப்போது பிடி கொடுக்கவில்லை. அதன்பின்னர் அண்மைக்காலமாக கங்குலி ராஜ்யசபா எம்பி ஆகலாம் என்ற தகவல் அரசல் புரசலாக இருந்துவந்தது. இந்நிலையில், இன்றைய கங்குலியின் டுவீட்டும், பிசிசிஐ வட்டார தகவல்களும் அவர் ராஜ்யசபா எம்பி உறுதி என்பதை அம்பலமாக்கியுள்ளது.
