எதிரணி கேப்டனா இருந்தாலும் அவரும் வளர்ற பையன் தானே..! பிரேக்கில் இலங்கை கேப்டனை அழைத்து பேசிய ராகுல் டிராவிட்
இளம் வீரர்களை வளர்த்துவிடுவதில் ஆர்வம் மிகுந்த ராகுல் டிராவிட், எதிரணியில் உள்ள இளம் வீரர்களும் வளர வேண்டும் என்று நினைக்கும் நல்லெண்ணம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஒரு சம்பவம் நடந்தது.
இளம் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை வளர்த்தெடுப்பதில் ராகுல் டிராவிட்டுக்கு நிகர் ராகுல் டிராவிட்டே. இந்தியா அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக இருந்து, பல இளம் திறமைசாலிகளை மெருகேற்றி இந்திய அணிக்கு கொடுத்த ராகுல் டிராவிட், இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுவருகிறார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய மெயின் அணி இங்கிலாந்தில் இருப்பதால், இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டுவருகிறார். ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஆடிய முதல் ஒருநாள் தொடரை 2-1 என வென்று அசத்தியது.
லெஜண்ட் கிரிக்கெட்டரான ராகுல் டிராவிட், அவரது திறமையான பேட்டிங்கை விட, அவரது பண்புகளால் அனைவரது மனதையும் வென்றவர். அவர் ஆடிய காலத்தில் ஒரு இன்னிங்ஸை கூட சுயநலமாக ஆடாமல் அனைவரது அபிப்ராயத்தையும் பெற்ற ராகுல் டிராவிட், பயிற்சியாளராக இருக்கும்போதும் தனது செயல்பாட்டால் ஈர்க்கிறார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தாலும், கடைசி ஒருநாள் போட்டிக்கு இடையே இலங்கை கேப்டன் தசுன் ஷனாகாவை அழைத்து ராகுல் டிராவிட் பேசிய சம்பவம், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியா - இலங்கை இடையேயான கடைசி ஒருநாள் போட்டி மழை குறுக்கீட்டால் 47 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், 226 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து வெற்றி பெற்றது இலங்கை அணி. முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்டதால், கடைசி போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, 23 ஓவரில் 147 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. அந்த பிரேக்கில் இலங்கை கேப்டன் தசுன் ஷனாகாவுடன் ராகுல் டிராவிட் பேசிக்கொண்டிருந்தார். ஷனாகாவுடன் டிராவிட் என்ன பேசினார் என்று துல்லியமாக தெரியாவிட்டாலும், கண்டிப்பாக கிரிக்கெட், உத்திகள் ஆகியவை குறித்துத்தான் பேசியிருப்பார்.
எதிரணியின் கேப்டனாக இருந்தாலும் கூட, அவரும் வளர்ந்துவரும் இளம் வீரர் தான் என்பதை மட்டுமே மனதில் வைத்து செயல்படுபவர் ராகுல் டிராவிட். எதிரணி வீரர்களும் நன்றாக ஆடி வளர்ந்தால் தான் கிரிக்கெட் ஆரோக்கியமாக இருக்கும் என்ற ராகுல் டிராவிட்டின் நோக்கம்தான், அவரது செயலில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.