#PBKSvsKKR பஞ்சாப் கிங்ஸை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டி முதல் இன்னிங்ஸிலேயே வெற்றியை உறுதி செய்த கேகேஆர்
பஞ்சாப் கிங்ஸை வெறும் 123 ரன்களுக்கு சுருட்டி 124 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிவருகிறது கேகேஆர் அணி.
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் ஆடிவருகின்றன. அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஒயின் மோர்கன், பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
5 போட்டிகளில் ஆடி ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் கேகேஆர் அணி, இந்த போட்டியில் வெற்றி முனைப்பில் களமிறங்கிய நிலையில், பவுலிங்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ராகுலும் மயன்க் அகர்வாலும் மந்தமாகவே தொடங்கினர். ஒருசில பவுண்டரிகள் அடித்தாலும் ரன்வேகம் மெதுவாகவே இருந்தது. 20 பந்தில் 19 ரன்கள் அடித்த ராகுலை பாட் கம்மின்ஸ் வீழ்த்த, கெய்லை முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாக்கி அனுப்பினார் ஷிவம் மாவி.
தீபக் ஹூடாவை ஒரு ரன்னில் பிரசித் கிருஷ்ணா வீழ்த்த, அடித்து ஆடமுடியாமல் திணறிய மயன்க் அகர்வாலும் 34 பந்தில் 31 ரன்கள் அடித்த நிலையில், அவரை அவுட்டாக்கிய சுனில் நரைன், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸை 2 ரன்னில் வீழ்த்தினார்.
அதன்பின்னர் ஷாருக்கானும் பூரனும் நம்பிக்கையளித்த நிலையில், பூரனை 19 ரன்னில் வருண் சக்கரவர்த்தியும், ஷாருக்கானை 13 ரன்னில் பிரசித் கிருஷ்ணாவும் வீழ்த்தினார். கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 3 சிக்ஸர்களை விளாசி, பஞ்சாப் அணியின் ஸ்கோர் 123 ரன்களை எட்ட உதவினார் கிறிஸ் ஜோர்டான்.
124 ரன்கள் என்ற எளிய இலக்கை கேகேஆர் அணி விரட்டிவருகிறது. நல்ல பேட்டிங் பிட்ச்சான அகமதாபாத்தில் கேகேஆர் அணி இந்த இலக்கை எளிதாக எட்டிவிடும்.