பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய கேப்டனாக மயன்க் அகர்வாலை நியமித்துள்ளது. 

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளும் புதிதாக களமிறங்குவதால், இந்த சீசனில் 10 அணிகள் ஆடுகின்றன. அதனால் இந்த சீசன் மிகுந்த சுவாரஸ்யமானதாக இருக்கும். 10 அணிகள் ஆடுவதால், 10 அணிகளும் தலா 5 அணிகளைகொண்ட இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆடவுள்ளன.

10 அணிகள் ஆடுவதால் 15வது சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்தது. ஏலத்திற்கு முன்பாக கேப்டன் கேஎல் ராகுலை கழட்டிவிட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. 

ஏலத்திற்கு முன்பாக மயன்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரை மட்டுமே தக்கவைத்திருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, ஏலத்தில் தவான், ரபாடா, பேர்ஸ்டோ என சிறந்த வீரர்கள் பலரை அணியில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ். 

சீனியர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு எடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணி, தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் ககிசோ ரபாடாவை ரூ.9.25 கோடிக்கும், ஜானி பேர்ஸ்டோவை ரூ.6.75 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது. 

ஃபினிஷரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ஷாருக்கானை ரூ.9 கோடிக்கும், ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹரை ரூ.5.25 கோடிக்கும் எடுத்தது. யாருமே எதிர்பார்த்திராத வகையில் இங்கிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.11.50 கோடிக்கு எடுத்து ஆச்சரியப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. 

ஏலத்திற்கு முன்பாக வெறும் 2 வீரர்களை மட்டுமே தக்கவைத்ததால், ரூ.72 கோடியுடன் ஏலத்திற்கு சென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, தங்களுக்கு வேண்டிய வீரர்களை எல்லாம் கோடிகளை கொட்டிக்கொடுத்து எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஒடீன் ஸ்மித்தை ரூ.6 கோடிக்கு எடுத்தது.

இவ்வாறாக ஏலத்தில் நல்ல வீரர்களை எடுத்து வலுவான அணியை கட்டமைத்துள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் யார் என்ற கேள்விதான் அனைவரின் மனதிலும் இருந்தது.

இந்நிலையில், மயன்க் அகர்வாலை கேப்டனாக நியமித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. 2011ம் ஆண்டிலிருந்து ஐபிஎல்லில் ஆடிவரும் மயன்க் அகர்வால், 2018ம் ஆண்டிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடிவருகிறார். ஐபிஎல்லில் 100 போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர் மயன்க் அகர்வால். 

ஐபிஎல்லில் நல்ல அனுபவம் கொண்ட வீரர் என்ற வகையிலும், பஞ்சாப் அணியுடன் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருவதால், அணியை பற்றி நன்றாக அறிந்தவர் என்ற வகையிலும் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.