#PAKvsSA 2வது டெஸ்ட்டிலும் பாகிஸ்தான் வெற்றி.. தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டிலும் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.
தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் ராவல்பிண்டியில் நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 272 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 201 ரன்களுக்கு சுருண்டது.
171 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி, முகமது ரிஸ்வானின் அபார சதத்தால்(115) 298 ரன்கள் அடித்து, மொத்தமாக 369 ரன்கள் முன்னிலை பெற்றது.
370 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் வெறும் 17 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்த வாண்டர்டசன் சிறப்பாக பேட்டிங் ஆடினார். சிறப்பாக ஆடிய மார்க்ரம் அரைசதம் அடிக்க, 4ம் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் அடித்திருந்தது.
59 ரன்களுடன் களத்தில் இருந்த மார்க்ரமும், 48 ரன்களுடன் களத்தில் இருந்த வாண்டர்டசனும் இணைந்து கடைசி நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். கடைசி நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 243 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி நாள் ஆட்டத்தில் களத்திற்கு வந்ததுமே வாண்டர்டசன் நடையை கட்ட, டுப்ளெசிஸ் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்த டெம்பா பவுமா நம்பிக்கையளித்தார். சிறப்பாக ஆடிய மார்க்ரம் சதமடித்தார். ஆனால் கடைசி வரை களத்தில் நின்று தனது பணியை செய்து முடிக்காமல், 108 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த பவுமாவும் 68 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 274 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி சுருண்டது. இதையடுத்து 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.