பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டி20 போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.  

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி லாகூரில் நேற்று நடந்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் தமீம் இக்பாலைத் தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. தமீம் இக்பால் மட்டுமே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து 65 ரன்களை குவித்தார். மற்ற யாருமே சரியாக ஆடாததால் வங்கதேச அணி, 20 ஓவரில் வெறும் 136 ரன்கள் மட்டுமே அடித்தது. 

137 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாமும் ஆஹ்சான் அலியும் களமிறங்கினர். அலி டக் அவுட்டானார். இதையடுத்து பாபர் அசாமும் சீனியர் வீரரான முகமது ஹஃபீஸ் ஜோடி சேர்ந்தார். 

இவர்கள் இருவரும் அதன்பின்னர் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல், வங்கதேச அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். அதிரடியாக ஆடிய இருவரும் பவுண்டரிகளாக விளாசி அரைசதம் அடித்தனர். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி, விக்கெட்டை இழக்காமல் 17வது ஓவரின் 4வது பந்திலேயே இலக்கை எட்டி எளிதாக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வெற்றி பெற செய்தனர். 

பாபர் அசாம் 44 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 66 ரன்களையும் முகமது ஹஃபீஸ் 49 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 67 ரன்களையும் அடித்தனர். ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டார்.