#ENGvsPAK முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் அணி படுமட்டமான பேட்டிங்..! வெறும் 141 ரன்களுக்கு ஆல் அவுட்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி வெறும் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி கார்டிஃபில் இன்று மாலை இந்திய நேரப்படி 5.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இங்கிலாந்து அணியை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா உறுதியானதால் அணியை முழுவதுமாக மாற்றி, பென் ஸ்டோக்ஸ் தலைமையில் வேறு அணியை இறக்கிவிட்டு ஆடுகிறது இங்கிலாந்து அணி.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து, பாகிஸ்தான் அணி பேட்டிங் ஆடியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் டக் அவுட்டாக, அவரைத்தொடர்ந்து கேப்டன் பாபர் அசாமும் டக் அவுட்டானார். இருவருமே சாகிப் மஹ்முதுவின் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தனர்.
முகமது ரிஸ்வான்(13), சௌத் ஷகீல்(5), சொஹைப் மஹ்மூத்(19) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, ஒருமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் ஃபகர் ஜமான் 47 ரன்னில் மேட் பார்கின்சனின் சுழலில் வீழ்ந்தார். ஃபஹீம் அஷ்ரஃபும் 5 ரன்னில் ஆட்டமிழக்க, 101 ரன்னுக்கே 7 விக்கெட்டுகளை இழந்தது.
அதன்பின்னர் ஹசன் அலி 6 ரன்னில் ஆட்டமிழந்தார். நன்றாக ஆடிய ஷதாப் கானும் 30 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக ஷாஹீன் அஃப்ரிடி ஆட்டமிழக்க, 35.2 ஓவரில் வெறும் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி.
இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக சாகிப் மஹ்மூத் 4 விக்கெட்டுகளையும், ஓவர்டன் மற்றும் பார்கின்சன் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
142 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை இங்கிலாந்து அணி விரட்டிவருகிறது.