ராகுல் டிராவிட்டையே இந்திய அணியின் நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கணும்..! சமூக வலைதளங்களில் வலுக்கும் குரல்
இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வழிநடத்தவுள்ள ராகுல் டிராவிட்டையே, இந்திய அணியின் நிரந்தர பயிற்சியாளராக நியமிக்குமாறு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குரல் கொடுத்துவருகின்றனர்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஜூன் 18-22ல் இங்கிலாந்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடிவிட்டு, அப்படியே இங்கிலாந்தில் இருந்து, இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆடுகிறது.
இதற்கிடையே இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. அந்த காலக்கட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தில் இருக்கும் என்பதால், அடுத்த லெவல் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது.
வெள்ளைப்பந்து ஸ்பெஷலிஸ்ட் வீரர்களான தவான், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருடன் சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா உள்ளிட்ட வீரர்களை கொண்ட அணி இலங்கையை எதிர்கொள்ளும்.
கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் இங்கிலாந்தில் இருப்பார்கள் என்பதால், இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு, அந்த தொடரில் பயிற்சி கொடுக்கவுள்ளார்.
இந்தியா அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் தலைமை பயிற்சியாளராக இருந்து, இன்றைய இளம் வீரர்களை உருவாக்கிவிட்டதே ராகுல் டிராவிட் தான். எனவே அந்த வீரர்கள் நிறைந்த இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியை ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்து வழிநடத்துவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும்.
இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணியை பயிற்சியாளராக இருந்து வழிநடத்தவுள்ள ராகுல் டிராவிட்டையே, இந்திய அணியின் நிரந்தர தலைமை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வலியுறுத்திவருகின்றனர்.